பாலுவோடு என்னை மோதவிட ஜெ. முயற்சி: வாசன்
மதுரை: தமிழகத்தில் எக்காலத்திலும் வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க முடியாது, தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை தாக்கியவர்களை உடனை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் மத்திய திட்ட அமலாக்கல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மர்ம கும்பலால் வேல் கம்பால் குத்தப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணசாமியை சந்தித்து நலம் விசாரித்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,
கிருஷ்ணசாமி உடல்நிலை தேறி வருகிறது. தமிழ்நாட்டில் வன்முறை கலாச்சாரத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தத் தாக்குதலில் தொடர்புடைய கும்பலை அடையாளம் கண்டு, உடனே கைது செய்ய வேண்டும். பதட்டமான பகுதிகளுக்கு அரசியல் தலைவர்கள் செல்கிறபோது போலீசார் தகுந்த பாதுகாப்பு கொடுப்பது நல்லதாகும்.
சேது சமுத்திர திட்டம் என்பது தமிழக மக்களின் நீண்ட நாள் கனவாகும். கடலோர மக்கள் இந்தத் திட்டத்தால் பெரும் பயன் அடைவார்கள். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும், நாட்டின் பெருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும். ஆனால் இந்தத் திட்டத்துக்கு பாரதிய ஜனதா கட்சியும், அதிமுகவும் முட்டுக் கட்டையாக உள்ளன.
அமலாக்கத்துறை வெளியிட்ட அறிவிப்பு என்று ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் சேது சமுத்திர திட்டப்பணி 15 சதவீத அளவே முடிந்துள்ளதாக திட்ட அமலாக்கள் துறை கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு விவரத்தை திட்ட அமலாக்கத் துறையோ, புள்ளியியல் துறையோ இப்போது வெளியிடவே இல்லை. பழைய தகவல்களின் அடிப்படையில் இது போன்ற வெட்டி அறிக்கையை வெளியிடுவது முன்னாள் முதலமைச்சரான ஒருவருக்கு அழகல்ல.
இது பொதுமக்களை திசை திருப்புகின்ற முயற்சி, இது நல்லதல்ல.
மத்தியில் இருவேறு துறைகளை சேர்ந்த அமைச்சர்களை (பாலுவையும் தன்னையும்) மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறார் ஜெயலலிதா. அது ஒருபோதும் நடக்காது. மத்திய, மாநில அரசுகள் சேது சமுத்திர திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றும்.
சேது சமுத்தி திட்டத்தால் தென்மாவட்ட மக்கள் நல்ல பலனடைவார்கள். ஜாதி, மதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள். எனவே இந்த திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
பிற மாநிலங்களை போல இல்லாமல் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications