கரூரில் அதிமுகவினர் ரோட்டை மறித்து உண்ணாவிரதம்
கரூர்: கரூரில் மோசமான நிலையில் உள்ள அமராவதி நதியின் குறுக்கே உள்ள பாலத்தை சீர் செய்யக்கோரி அதிமுகவினர் ரோட்டை மறித்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
கரூரில் அமராவதி நதியின் குறுக்கே பாலம் கட்ட 1998ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக அரசு அனுமதி அளித்ததது. இதற்கான ஒப்பந்தம் இசிசிஐ என்னும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ரூ. 13 கோடியில் கட்டுமான பணிகள் முடிந்து 2000ம் ஆண்டு இப் பாலம் திறக்கப்பட்டது.
அமராவதி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் புதிய பாலம் 2005 நவம்பர் 24 ம்தேதி பழுதடைந்தது. பாலம் கட்டுமானத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அது குறித்து விசாரிக்க அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டார்.
2005ம் ஆண்டு பாலத்தை பார்வையிட்ட நிபுணர்குழு அறிக்கை அடிப்படையில் பாலத்தை டிசம்பர் 19ம் தேதி அரசே ஏற்று சுங்கவரியை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் பாலத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சி துறை அமைச்சர் கோசி மணி, உயர் அதிகாரிகள் மீது செண்னை சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடந்தது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு அந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் அளித்த அறிக்கையின் படி அரசு ரத்து செய்தது.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றும் 18 மாதங்கள் ஆகியும் கரூரில் அமராவதி பாலத்தை சீர் செய்யவில்லை என கூறி அதிமுக சார்பில் இன்று காலை முதல் கரூர் தாலுகா அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் சின்னசாமி தலைமையில், கரூர் மாவட்ட செயலாளரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
உண்ணாவிரதத்தில் இளைஞர்அணி மாவட்டசெயலாளர் கரூர் நாகராஜன், மாணவர் அணி மாவட்ட செயலாளர் மெட்ரோ பிரபு, அரசு காலனி செயலாளர் காலனி சேகர், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
தாலுகா அலுவலகம் முன்பு ரோட்டை மறித்து உண்ணாவிரத பந்தல் போடப்பட்டு உள்ளதால் அந்த வழியாக மக்கள் செல்ல முடியாமல் மாற்று வழியில் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.