அமைதிக்காக காத்திருக்கும் அயோத்தி!!
அயோத்தி: பாபர் மசூதி, ராமர் கோவில் ஆகிய பிரச்சினைகளை வைத்து அரசியல்வாதிகள் செய்து வரும் அரசியல் விளையாட்டால் அயோத்தி மக்கள் பெரும் விரக்தி அடைந்துள்ளனர். என்று அயோத்தியில் அமைதி திரும்புமோ என்ற பெரும் எதிர்பார்ப்பில் அவர்கள் அமைதிக்காக காத்திருக்கின்றனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகி விட்டன. மசூதி இருந்தபோதும் பிரச்சினை, மசூதியை இடித்த பிறகும் தொடரும் பிரச்சினை என்று அயோத்தி ரண பூமியாகவே நீடிப்பது அயோத்தி மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தியாவின் இதர பகுதிகளில் வாழும் மக்களைப் போல நாங்களும் அமைதியுடனும், நிம்மதியுடனும் வாழ வேண்டும். மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று அயோத்தி மக்கள் விரும்புகின்றனர்.
முகம்மது ஜமீல் அகமது என்பவர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவுகள், சாலை மறியல்கள், தடியடிகள் எங்களது தினசரி வாழ்க்கையாகி விட்டது. இது எங்களின் தலைவிதி.
எங்களுக்குத் தேவை பிரச்சினை அல்ல, அமைதியான வாழ்க்கைதான். அமைதியான முறையில், எந்தவித வன்முறையும் இல்லாத சூழலில் வாழ நாங்கள் விரும்புகிறோம். இங்கு வசித்து வந்த முஸ்லீம் மதத்தினர் பலர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். அந்த நிலை மாற வேண்டும் என்றார் அவர்.
ராப்ரி என்ற பெண்மணி கூறுகையில், அயோத்தியில் நடந்த கலவரத்தில் எனது கணவர் கொல்லப்பட்டு விட்டார். இருந்தாலும் இந்த இடத்தை விட்டுப் போக எனக்கு விருப்பம் இல்லை. இங்குள்ளவர்கள் எனது கணவரைக் கொல்லவில்லை. எங்கிருந்தோ வந்தவர்கள்தான் அவரைப் போன்ற பல அப்பாவிகளைக் கொன்று விட்டனர்.
இங்குள்ள மக்கள் நல்லவர்கள், அமைதி விரும்பிகள். நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். எனக்கும், எனது ஐந்து குழந்தைகளுக்கும் இங்குள்ள மக்கள் நல்ல பாதுகாப்பாக உள்ளனர். இந்துக்கள்தான் எனது குழந்தைகளை காப்பாற்றியவர்கள்.
விரைவில் இங்கு அமைதி திரும்ப வேண்டும். இனிமேலும் இங்கு வன்முறை கூடாது. விரைவில் சுமூக நிலை திரும்பும், நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக் கொண்டுள்ளோம் என்றார் அன்வாரி.
'அரசியல் பிழைப்பாளர்களின்' காதுகளை இந்த அப்பாவிகளின் எதிர்பார்ப்பு வார்த்தைகள் சென்றடையுமா?












Click it and Unblock the Notifications