பிறந்தது 2008 உலகெங்கும் உற்சாக கொண்டாட்டம்

டெல்லி: 2008ம் ஆண்டு பிறந்தது. இதையொட்டி உலகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டங்கள் களை கட்டின.
2007ம் ஆண்டு முடிந்து 2008ம் ஆண்டு நேற்று நள்ளிரவு பிறந்தது. புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.
இந்தியாவிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்கள், ரிசார்ட்டுகள், பொழுதுபோக்குப் பூங்காக்களில்சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நள்ளிரவு 12 மணி ஆனதும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்
சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடி புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதுதவிர கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கிளப்கள், பொழுதுபோக்கு தீம் பார்க்குகளிலும் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது.
கோவில்களில் விசேஷ வழிபாடு:
புத்தாண்டையொட்டி கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடத்தப்பட்டன.
இன்று அதிகாலையிலேயே வடபழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தோடு சென்று சாமி கும்பிட்டனர்.
இதேபோல நகரில் உள்ள பிற கோவில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு பிரார்த்தனைகள் நடந்தன.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு 5,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழகத்தின் இதர பகுதிகளிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. இதேபோல டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் காணப்பட்டன.
நெல்லை - தூத்தூக்குடியில் கொண்டாட்டம்
புத்தாண்டை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து சர்சுகள், கோயில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், கமிஷனர் மஞ்சுநாதா, எஸ்,பி ஸ்ரீதர், தீபக் தமோர் உத்தரவின் பேரில் விடிய விடிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கடைகளில் கேக் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை சூடாக இருந்தது.
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபட்டாளோ, வாகனங்களில் மிக வேகமாக சென்றாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து இருந்தனர். இதையொட்டி விடிய விடிய தீவிர ரோந்து நடந்தது.
மாவட்டம் முழுவதும் உள்ள சர்ச்சுகளில் நேற்று 31ம் தேதி நள்ளிரவு புத்தாண்டை வரவேற்க சிறப்பு பிராத்தார்னை நடந்தது. பாளை சவேரியர் ஆலயத்தில் இரவு 11 மணிக்கு கூட்டு திருப்பலி நிகழ்ச்சியில் மறை மாவட்ட பிஷப் ஜூடு பால்ராஜ் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.
இதே போல் பாளை கதீட்ரல் ஆலாயத்தில் இரவு 11.30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனையும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு ஆராதனையும் நடந்தது. இதில் சிஎஸ்ஐ பிஷப் ஜெயபால் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சர்ச்சு, கோயில்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிராத்தனைகள் நடந்தது.












Click it and Unblock the Notifications