நிதி நெருக்கடி: அலறும் ஐ.ஐ.டிக்கள்-மத்திய அரசு உதவுமா?
சென்னை: சென்னை ஐஐடி உள்ளிட்ட நாட்டில் உள்ள 7 ஐஐடி கல்வி நிறுவனங்களும் பெரும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகின்றன. உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி மத்திய மனித வளத் துறைக்கு 7 ஐஐடிகளின் இயக்குநர்களும் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் சென்னை உள்பட 7 இடங்களில் ஐ.ஐ.டிக்கள் உள்ளன. இவற்றுக்கு 3 வழிகளில் நிதி கிடைக்கிறது. முதலாவது, மத்திய மனித வளத்துறை அளிக்கும் நிதியுதவி. 2வது, மாணவர்களிடமிருந்து பெறப்படும் படிப்புக் கட்டணம். 3வது பல்வேறு நிறுவனங்களுக்காக செய்து தரப்படும் ஆய்வு மற்றும் பரிசோதனைகளுக்காக பெறப்படும் கட்டணம்.
இவற்றில் மத்திய அரசு வழங்கும் நிதிதான் மிகப் பெரியது, முக்கியமானது. இந்த நிதியை வைத்துத்தான் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. பிற நிறுவனங்களுக்காக ஆய்வு செய்து தருவதற்காக பெறப்படும் நிதியைக் கொண்டு ஆய்வகப் பராமரிப்பு, உபகரணங்கள் வாங்குவது போன்றவற்றுக்கு பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மத்திய மனித வளத்துறையிடமிருந்து வர வேண்டிய நிதி வரவில்ைல என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை ஐஐடி உள்பட நாட்டில் உள்ள 7 ஐஐடி நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனவாம்.
நிதி வராமல் இருப்பதற்கு மத்திய நிதியமைச்சகம் செய்து வரும் தாமதம்தான் முக்கிய காரணம் என ஐஐடிகள் குற்றம் சாட்டுகின்றன.
நிதிப் பற்றாக்குறை நிலவுவதால், வெளி நிறுவனங்களிலிருந்து தலை சிறந்த ஆசிரியர்களை வரவழைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்துவது பாதிக்கப்படும். ஆய்வுகள் பாதிக்கப்படும் என்று ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தங்களது நிலைமையை விளக்கி மத்திய மனித வள அமைச்சகத்திற்கு 7 ஐஐடிகளின் இயக்குநர்களும் கடிதம் எழுதியுள்ளனர். அதில் ஒவ்வொரு ஐஐடிக்கும் தலா ரூ. 20 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கி நிலைமை மோசமாவதை தவிர்க்க உதவ வேண்டும் என்று கோரியுள்ளதாக தெரிகிறது.
நிதிப் பற்றாக்குறை காரணமாக குடிநீர் கட்டணம், மின் கட்டணத்தை சமாளிப்பது பெரும் பாடாகியுள்ளதாம்.
நிதிப் பற்றாக்குறை சமீப காலமாக ஏற்படவில்லை, 2002ம் ஆண்டு முதலே இது இருந்து வருவதாகவும் ஐஐடிகள் தெரிவிக்கின்றன.
மும்பை ஐஐடியில் அடுத்த மாத சம்பளத்திற்கு வாய்ப்பில்ைல என்று ஊழியர்களிடம் ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளதாம்.
50களில் ஐஐடிகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு தற்போதுதான் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.