காதலர் தினம்-சென்னை ஹோட்டல்களில் கொண்டாட்டம்
சிங்கப்பூர் அரசு காதலர் தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது.
இங்கு பிறப்பு விகிதம் குறைவு என்பதால் காதலர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசே கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
காதல் செய்யும் நேரம் இது என்ற ரீதியில் காதலை வலியுறுத்தியும், காதல் திருமணங்களை ஊக்குவித்தும் அரசு பிரசாரம் செய்து வருகிறது.
இந்தியாவிலும் காதலர் தினக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. சிவசேனா, பஜ்ரங் தளம் என சில அமைப்புகள் காதலர் தினத்தை எதிர்த்து போராட்டங்களுடன் தயாராக இருக்கும் நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் வழக்கம் போல உற்சாகமாக பிப்ரவரி 14ம் தேதியைக் கொண்டாட இந்தியக் காதலர்கள் மும்முரமாக உள்ளனர்.
நாட்டின் பெருநகரம் முதல் சிறு நகரம் வரை காதலர் தின கொண்டாட்ட உற்சாகத்தைக் காண முடிகிறது. வாழ்த்து அட்டை விற்பனைகள் படு சூடாக உள்ளன. ரோஜாக்கள் விற்பனையும், பரிசுப் பொருட்கள் விற்பனையும் கூட கன ஜோராக உள்ளது.
வாழ்த்து அட்டையும் ரோஜாவும் கொடுப்பது பாரம்பரிய முறை என்றாலும், இந்த முறை, இ கார்டு எனப்படும் இன்டர்நெட் மூலம் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதும், காதலைச் சொல்வதிலும் காதலர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஹோட்டல்களில் கொண்டாட்டம்-சங்கவி பங்கேற்பு:
புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது விருந்துகளுக்கும், ஆட்டம், பாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்வது போல இந்த முறையும் பெருநகரங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரபலமான கன்ட்ரி கிளப் நிறுவனம், நடிகை சங்கவியை வைத்து சிறப்பு காதலர் தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களான எழும்பூர் அம்பாசடர் பல்லவா, ஜி.ஆர்டி கிராண்ட் ஹோட்டல், தாஜ் கோரமண்டல், தாஜ் கன்னிமாரா என அனைத்து ஹோட்டல்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காதலர் தினத்தன்று ஹோட்டல்களுக்கு வரும் ஜோடிகளுக்கு சிறப்பு உணவும், பரிசுப் பொருட்களும் காத்துள்ளன.
போலீஸ்...உஷார்!:
உற்சாக வெள்ளத்தில் ஒரேயடியாக மூழ்கி ஓவராகப் போய் விடக் கூடாது என்பதற்காக காதலர்களுக்கு கொண்டாட்டத்தின்போது கட்டுப்பாடு வேண்டும் என்று சென்னை காவல்துறை காதலர்களை எச்சரித்துள்ளது.
'நோ' ஆபாசம்:
குறிப்பாக கடற்கரை, பொது இடங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றில் அத்துமீறி நடந்து கொள்வது, ஆபாசமாக நடந்து கொள்வது, முத்த்மிட்டுக் கொள்வது போன்றவை கூடவே கூடாது என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னையில் உள்ள காதலர்களின் முக்கிய சங்கம இடமான மெரீனா கடற்கறையில் நாளை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமாம். காதலர்கள் கடற்கறை மணலை களங்கப்படுத்துவது போல நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
எனவே, காதல் எனும் 'தேர்வெழுதப்' போவோருக்கும், ஏற்கனவே எழுதி 'பாஸ்' ஆனவர்களுக்கும் நாளைய தினம் என்றும் மறக்க முடியாத தினமாக மாற வாழ்த்துவோம்.
வேதனையில் வெந்நீர் ஊற்றும் 'வேலன்டைஸ் டே':
இந் நிலையில் உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் காதலர் தினம், மன அழுத்தத்தில் உள்ளவர்களை மேலும் வேதனைப்படுத்தும் என ஆஸ்திரேலிய ஆய்வு தெரிவிக்கிறது.
தங்களது இயலாமையை வெளிப்படுத்தும் தினமாக அதை மன உளைச்சலுக்கு ஆளாபவர்கள் கருதுகிறார்களாம்.
இதுகுறித்து சிட்னி பல்கலைக்கழக சமூக சேவைப் பிரிவு பேராசிரியர் மெக் ஸ்மித் கூறுகையில், மன அழுத்தம், மனப் புழக்கம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கலுக்கு இந்த நாள் நிச்சயம் நல்ல நாள் இல்ைல.
இன்றைய தினத்தில், மற்ற நாட்களை விட அதிக வேதனையில் இவர்கள் இருப்பார்கள். தங்களது இயலாமையை நினைவு கூறும் தினமாக காதலர் தினத்தை இவர்கள் கருதுவதே இதற்குக் காரணம்.
காதலில் தோல்வி அடைந்தவர்கள், காதலியரோ அல்லது காதலரோ கிடைக்காதவர்கள், காதல் செய்ய தயங்குபவர்களுக்கு இந்த நாள் பெரும் துயர நாளாக இருக்கும் என்கிறார் அவர்.













Click it and Unblock the Notifications