எனக்கு டெல்லியைக் கண்டு பயமில்லை-விஜய்காந்த்
சென்னை: டெல்லியைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதனும் சில கேள்விகளை அறிக்கைகள் மூலம் எழுப்பியுள்ளனர். கடந்த ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி அவர்கள் நிர்ணயித்த இலக்கை அவர்களாலேயே எட்ட முடியவில்லை.
இந்தியாவிலேயே வேலை இல்லாதோர் தமிழகத்தில் தான் அதிகம். சட்டசபையில் ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் தங்கள் தலைவர்களைத் துதி பாடுவதிலேயே அதிக நேரம் செலவழிக்கின்றனர்.
என் விருத்தாசலம் தொகுதியைப் பற்றியும், தமிழகத்தின் பிரச்னைகள் குறித்தும் சட்டசபையில் பேசி இரண்டு ஆண்டுகள் ஆகியும் கூட அரசு அவற்றில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
நாற்பது பார்லிமென்ட் உறுப்பினர்களை எங்களிடம் தந்தால் டெல்லியில் யார் இருந்தாலும் அவர்களை பிடித்து உலுக்கி கேட்பேன். கலக்குவேன் என்று பேசியது ஆணவம் அல்லவா என்று அமைச்சர் கேட்கிறார். டெல்லியை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
விசாரணை கமிஷனைக் கண்டு பயப்படுவதோ அல்லது ஊழல் வழக்குகளில் சிக்கியதாலோ அல்லது சட்டத்திற்கு மீறி சொத்துக்களை சேர்த்தாலோ அஞ்ச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மக்களுக்காக எதையும் செய்வேன் என்ற உணர்வில் தான் அப்படி பேசினேன்.
நாட்டு மக்களுக்கு தொண்டாற்ற என்னை அர்ப்பணித்து விட்டேன்.
இவ்வாறு விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.