அமீரிடமிருந்து ஷாருக் கற்க வேண்டும்: அன்புமணி
பெங்களூர்: படைப்பாளிகளின் உரிமை குறித்துப் பேசும் ஷாருக் கான், அதன் முக்கியத்துவம், அதன் அருமைகள் குறித்து அமீர் கான் போன்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.
சினிமாவில் புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற அன்புமணியின் கோரிக்கையை படைப்பாளின் உரிமையில் அமைச்சர் தலையிடக் கூடாது என்று கூறி நிராகரித்தார் ஷாருக்.
இந் நிலையில் பெங்களூரில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அன்புமணி,
படைப்பாளிகள் தங்கள் சுதந்திரத்தை சமுதாய நலனுக்காக பயன்படுத்த வேண்டும். மனித இனத்தை அழிக்க பயன்படுத்தக் கூடாது.
அமீர் கானின் தாரே சமீன் பர் படத்தைப் பாருங்கள். குழந்தைகளை பாதிக்கும் டிஸ்லெக்சியா குறித்த பிரச்சனையை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார். டிஸ்லெக்சியா குறித்தும், குழந்தைகளின் பிரச்சனை குறித்தும் இதுவரை மக்களிடமும் ஆசிரியர்களிடமும் இருந்து வந்த மாயையை உடைத்துத் தள்ளிவிட்டார்.
படைப்பாளின் உரிமையும் சுதந்திரம் இந்த வகையி்ல் தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
மாணவர்களிடையே புகைப் பிடித்தல் அதிகரித்து வருவது மிகுந்த கவலை தரும் விஷயம். இதை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இந்தியாவில் 10 சதவீத ஹை ஸ்கூல் மாணவர்கள் புகையிலை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. அதே போல குடிப்பழக்கம் ஆரம்பிக்கும் வயதும் 27ல் இருந்து இப்போது 19 வயதுக்கு இறங்கி வந்துவிட்டதை நிம்ஹான்ஸ் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
இதெல்லாம் மிகுந்த கவலையை தருகின்றன என்றார் அன்புமணி.