இது மக்கள் விரோத பட்ஜெட்-ஜெ
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் திசையற்ற, பற்றாக்குறையுடன் கூடிய பட்ஜெட்டாகும். ரயில்வே பட்ஜெட்டை போலவே, மத்திய பட்ஜெட்டும் முழுக்க முழுக்க நாடாளுமன்ற தேர்தலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
விவசாய கடன் ரத்து செய்யப்பட்டதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சிறு-குறு விவசாயிகளுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. அதுவும் ஒரு ஹெக்டேர் நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கும், 2 ஹெக்டேர் நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
மற்ற விவசாயிகள் தங்கள் கடனை செலுத்துவதற்கு முன்வந்தால், ஒரே தவணையில் 25 சதவீத கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
விவசாயக் கடனுக்கான ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் காணவில்லை என்பதால், வங்கிகளில் விவசாயிகள் புதிதாக கடன் பெறுவது கடினமாகும். கடனை திரும்பச் செலுத்துவதற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை பட்ஜெட்டில் ப.சிதம்பரம் விளக்கவே இல்லை.
கடனை ஒழுங்காக செலுத்தி வரும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
2005 ஏப்ரல் மாதத்துக்கு முன் கடன் பெற்று, 2007 வரை திருப்பி செலுத்தாத விவசாயிகள் மட்டுமே இந்த கடன் தள்ளுபடியால் பயன் அடைவார்கள்.
தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெரும்பாலான விவசாயிகள் யாரும் வங்கியில் இருந்து கடன் பெறவில்லை. அவர்கள் அனைவரும் அதிக வட்டிக்கு தனியாரிடம் இருந்து கடன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு நிவாரணமாக எதுவும் சொல்லப்படவிலை.
சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆடம்பர திட்டம் என்று கடந்த 2004ம் ஆண்டு ப.சிதம்பரம் கூறினார்.
இப்போது இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க 4 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. அதுவும் தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்குத் தேவையான ஆரம்ப கட்டத் தொகையான ரூ. 1,000 கோடி, தூரதிருஷ்டவசமாக ரூ.300 கோடியாக சுருங்கி விட்டது.
இது மக்கள் விரோத பட்ஜெட் என்பது தெளிவு. இந்த பட்ஜெட்டால் சாதாரண மக்கள், ஏழை, எளியவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்பது நிச்சயம். புதிய, ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதையும் இந்த பட்ஜெட்டில் பார்க்க முடியவில்லை.
இந்த ஆண்டு ஜனவரியில் தமிழக மக்கள் பலர் கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இதற்காக ரூ.1,500 கோடி கேட்டு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் பட்ஜெட்டில் இதற்கு பணம் ஒதுக்கப்படவில்லை.
இந்திய பொருளாதாரம் மேம்படுவதற்கான திட்டங்கள் எதுவும் தெளிவாக்கப்படவில்லை.
உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கான உருப்படியான நடவடிக்கை எதுவும் இதில் இவில்லை. பெரிய சத்தத்துடன் மிக ஆடம்பரமாகத் தொடங்கிய இந்த பட்ஜெட் கடைசியில் முனகலாக முடிந்து விட்டது. பெரும்பாலான மக்களுக்கு இந்த பட்ஜெட்டால் பயன் ஏற்படும் என்பதற்கான ஒரு அடையாளமும் இல்லை என ஜெயலலிதா கூறியுள்ளார்.