மும்பை பங்குச் சந்தை: 2 மாதத்தில் ரூ.23 லட்சம் கோடி நஷ்டம்

மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து அதல பாதாளத்தில் இறங்கிக் கொண்டிருப்பதால் முதலீட்டாளர்களும், தொழிலதிபர்களும் கலக்கமடைந்துள்ளனர்.
கடந்த ஏழு மாதத்தில் மிகக் குறைவான அளவை சென்செக்ஸ் தொட்டுள்ளது. ஜனவரி 7ம் தேதி மும்பை பங்குச்சந்தையில் மொத்த பங்கு மதிப்பு ரூ.74 லட்சத்து 44 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் இப்போது ரூ.51 லட்சம் கோடியாக உள்ளது. அதாவது, பங்கு மதிப்பில் ரூ. 23.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ் சுமார் 5,600 புள்ளிகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கம்பெனி அதிபர்களின் சொத்து மதிப்பு ரூ.13 லட்சம் கோடியும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடியும் சரிந்துள்ளது.
மொத்தம் 2,500 நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிந்துள்ளது. இந்த சரிவில் இருந்து வெறும் 100 கம்பெனிகளின் பங்குகள் மட்டுமே தப்பின.
2008ம் ஆண்டில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி உள்ளிட்ட நாட்டின் டாப் 10 நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு மட்டும் ரூ.5 லட்சம் கோடி சரிந்துள்ளது.
2007 டிசம்பர் 31ம் தேதி இந்த நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு ரூ.20.21 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது ரூ.15 லட்சம் கோடியாக குறைந்துவிட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.93 ஆயிரம் கோடி குறைந்துள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எப்-பின் பங்கு மதிப்பு ரூ.80 ஆயிரம் கோடி சரிந்துள்ளது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஓஎன்ஜிசி, என்டிபிசி நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் சரிந்துள்ளது.
ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி ஆகியவை ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் இழந்துள்ளன.
இது பற்றி மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், " பங்குச்சந்தை கொந்தளிப்பு எதிர்பாராதது அல்ல. அது எல்லை மீறாமல் செபி கவனித்துக் கொள்ளும்.
இந்திய பங்குச் சந்தை இந்திய பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் ஆசிய பொருளாதாரத்தையும் பிரதிபலிக்கிறது.
சர்வதேச நிதிச்சந்தையிலும் கொந்தளிப்பு உள்ளது.
நமது பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 30 கம்பெனிகளின் பங்கு விலைகளின் ஏற்ற இறக்கத்தையும் நிப்டி 50 அல்லது 100 கம்பெனிகளின் பங்கு விலைகளை மட்டுமே குறிப்பிடுகிறது " என்றார்.












Click it and Unblock the Notifications