ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: கனடா
டொராண்டோ: அங்கீகரிக்கப்படாத ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று கனடா நாட்டு மக்களை அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவின் தொன்மையான மருத்துவமுறை ஆயுர்வேதம். ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தை கனடா நாட்டு அரசு அங்கீகரிக்கவில்லை.
இருப்பினும், கனடாவாழ் இந்தியர்கள் இந்தியாவி்ல் இருந்து வாங்கிச் சென்று பல்வேறு நோய்களுக்காக ஆயுர்வேத மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் வான்கூவரில் உள்ள பிரிட்டன் கொலம்பியா நோய் பரவல் தடுப்பு மையம் கனடா நாட்டு மக்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்திய இந்திய வம்சாவளியினர் 2 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் அங்கீகரிக்கப்படாத ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டு மருந்துக் கட்டுப்பாடு துறை அதிகாரி டான் கேர் இது பற்றி கூறுகையில், " ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று
தொடர்ந்து எச்சரிக்கப்பட்டது. அந்த மருந்துகளில் எக்கச்சக்கமான அளவுக்கு ஈயம், ஆர்சனிக்,மெர்க்குரி போன்ற உலோகங்கள் அடங்கியிருக்கின்றன. தொடர்ந்து இவற்றை சாப்பிட்டால் உடம்பில் நச்சுத்தன்மை அதிகரித்துவிடும்.
ஈயத்தின் அளவு உடம்பில் அதிகரித்தால் வயிற்றுவலி, ரத்தசோகை, ரத்தக் கொதிப்பு, இனப்பெருக்கக் கோளாறு, அயர்ச்சி, கவனச்சிதறல், எடை குறைதல், தூக்கமின்மை, தலைச்சுற்றல், சிறுநீரகம் மற்றும் மூளைக்கோளாறுகள் ஆகியவை ஏற்படும். இறுதியில் மரணம் ஏற்படும்.
மெர்க்குரியின் பக்கவிளைவுகளாக எரிச்சல், உடல்நடுக்கம், ஞாபகமறதி, தூக்கமின்மை, சிறுநீரகச்செயலிழப்பு மற்றும் மூளைபாதிப்புகள் உண்டாகும்.
இந்தியாவில் கடுமையான மருந்து தரக்கட்டுப்பாடு விதிகள் பின்பற்றப்படுவதில்லை. முன்பெல்லாம் ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்கும்போது பிரத்யேகமான முறையில் பலமுறை சூடுபடுத்தி, குளிரூட்டி பதப்படுத்திய உலோகங்களைப் பயன்படுத்தினர். நவீனகால மருந்து தயாரிப்பில் இந்தமுறை பின்பற்றப்படுவதில்லை.
தற்போது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சத்துக்குறைவுக்காகவும், மற்றொருவர் சர்க்கரை நோய்க்காகவும் ஆயுர்வேத மருந்துகளை சாப்பிட்டுள்ளனர். 3 வார சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறியுள்ளனர் "
என்று கூறினார்.
ஆயுர்வேத மருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று கனடா நாட்டு அரசு கடந்த 2006ல் இருந்தே வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications