2 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது-ஸ்டாலின்
சென்னை: கடந்த 2 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் நேற்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. எல் ஆண்ட் டி, ஹூண்டாய், சுதர்லாண்ட், பேரொட் சிஸ்டம்ஸ் உள்பட 25 ஐடி நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இதி்ல் 5,000 பெண்கள் உள்பட 11,000 பேர் கலந்துகொண்டனர்.
இதில் 3,000 பேருக்கு வேலை கிடைத்தது.
முன்னதாக இந்த முகாமை துவக்கி வைத்து உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் பேசுகையில்,
தேர்தல் வாக்குறுதியில் கூறியதை கடந்த 2 ஆண்டு காலத்தில் திமுக அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் பணியை செவ்வனே செய்து வருகிறோம்.
இந்திய அளவில் மனித வளர்ச்சி குறியீடு தமிழகத்தில் தான் அதிக அளவு உயர்ந்திருக்கிறது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றபோதெல்லாம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டன என்பது வரலாற்று உண்மை.
ஆனால், கடந்த ஆட்சிகாலத்தில் வேலை வாய்ப்பே உருவாக்கப்படவில்லை. மேலும், இருந்த வேலைகளையும் பறித்தார்கள்.
கடந்த 2 ஆண்டு திமுக ஆட்சியில் பல தொழிற்சாலைகள் தமிழகத்தை நாடி வந்து லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளை தந்துள்ளன.
அரசு துறைகளில் அனைத்து காலி இடங்களும் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசுத் துறையில் மட்டும் 2.34 லட்சம் பேருக்கு வேலை தந்துள்ளோம்.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications