கிரீமி லேயர்-வருமான வரம்பை மறு ஆய்வு செய்ய திமுக கோரிக்கை
இப்போது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள் இந்த கிரீமி லேயர் பிரிவின் கீழ் வருகின்றனர். இந்த கிரீமி லேயர் பிரிவால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாக கிடைக்காது என்பது வாதமாகும்.
இந் நிலையில் கிரீமி லேயர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதியின் சார்பில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று சந்தித்து பேசினார்.
அப்போது பிரதமரிடம் கடிதம் ஒன்றையும் பாலு அளித்தார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:
27 சதவீத இட ஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் கிடைத்துள்ள வெற்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனையாகும் என்றாலும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வசதியானவர்களை (கிரீமி லேயர்) அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
6வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி பரவலாக அனைத்து பிரிவுகளில் இருக்கும் ஊழியர்களுக்கு வருமானம் உயரும் சூழ்நிலை உள்ளது. எனவே குரூப் டி' ஊழியர்களின் வாரிசுகளுக்கு கூட 27 சதவீத இடஒதுக்கீட்டின் பயன் கிடைக்குமா என்பதில் கேள்விக்குறி இருப்பதாக பொதுவான கருத்து உள்ளது.
எனவே 27 சதவீத இட ஒதுக்கீட்டின் பயனை 100 சதவீதம் பிற்படுத்தப்பட்டவர்கள் பெற வேண்டுமானால் வருமான வரம்பை உடனடியாக சீரமைக்க மறு ஆய்வு செய்வது அவசியமாகும்.
இது தொடர்பாக திமுகவின் கருத்தை முதல்வர் கருணாநிதி விரைவில் தர உள்ளார். அதன் அடிப்படையில் விரிவான விவாதம் நடத்தி சரியான நேரத்தில் முடிவெடுக்கலாம்.
இந்த பிரச்சினையில் வருமான வரம்பு விஷயத்தில் விரைவான நடவடிக்கை எடுத்தால்தான் 27 சதவீத இட ஒதுக்கீட்டு பயனை இந்த ஆண்டே பெற இயலும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் கிரீமி லேயர் என்பதை நிர்ணயிக்கும் வருமான உச்ச வரம்பான ரூ. 2.5 லட்சத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என திமுக கோருகிறது.
கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பிரதமர், இட ஒதுக்கீடு விஷயத்தில் கிரீமி லேயர் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சியினருடனும் கருத்து கேட்டு ஒருமித்த கருத்தை எட்டுமாறு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கை அறிவுறுத்தி இருப்பதாக பாலுவிடம் பிரதமர் தெரிவித்தார்.
கருணாநிதியுடன் பிரதமர் பேச்சு:
மேலும் முதல்வர் கருணாநிதியுடன் பிரதமர் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு வருமான வரம்பை சீரமைப்பது குறி்த்து உறுதி செய்வதாக தெரிவித்தார்.
ரூ. 2.5 லட்சத்தை ரூ. 5 லட்சமாக்க சரத் கோரிக்கை:
பிற்படுத்தப்பட்டவர்களில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் உள்ளவர்கள் கிரீமி லேயர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதை, ஆண்டு வருமானம் 5 லட்சம் இருப்பவர்கள் தான் கிரீமி லேயர் என்று மாற்றி அமைக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கி, மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கிறது. இது ஒரு சிறப்புமிக்க தீர்ப்பு.
அதே வேளையில், பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்ற தத்துவம் நிலை நாட்டப்பட்டுள்ளது.
இந்த இட ஒதுக்கீடு பெற தனியார் துறைகளில் வேலையில் இருப்பவர்களுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பது ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கைக்கு ஏற்புடையதல்ல.
இன்றைய சூழ்நிலையில் வருமான உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்தி ஆணையிட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது.