நாமக்கல்லில் போலி பெண் எஸ்ஐ கைது
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருகே திருபாக்குளத் தெருவைச் சேர்ந்த சமையல் காண்ட்ராக்டர் நாகராஜன். அவரது மனைவி வசந்தி (30), போலீஸ் நண்பர்கள் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.
அந்தப் பழக்கத்தை பயன்படு்த்தி நாமக்கல்லில் பலரிடம் தன்னை போலீஸ் எஸ்.ஐ என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். சென்னை ஆவடியில் எஸ்.ஐ ஆக பயிற்சி பெற்றதாகவும் தற்போது ஓசூரில் பணிபுரிவதாகவும் கூறியுள்ளார்.
போலீஸ் எஸ்.ஐ. சீருடை அணிந்தபடியே, பெரும்பாலான நேரம் வலம் வந்துள்ளார். அவரது தோற்றம், சீருடை அணிந்த நிலையில் அவரது பேச்சு ஆகியவற்றைப் பார்த்த பலரும் உண்மையிலேயே போலீஸ் எஸ்.ஐ. என நம்பிவிட்டனர்.
போலீஸ் சீருடையில் அரசு பஸ்களில் ஓசி பயணம் செய்வது, கட்டப்பஞ்சாயத்து போன்ற காரியங்களை செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருகே ரோந்து பணியில் இருந்த போலீசார் 'எஸ்.ஐ.' வசந்தியைப் பார்த்து சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். ஆனால் வசந்தி கொஞ்சமும் அசராமல் பேசியுள்ளார்.
தனது பெயர் பிருந்தா என்றும், ஓசூரில் எஸ்.ஐயாக பணிபுரிவதாகவும் கூறினார். அவரது பேச்சில் நம்பிக்கையில்லாமல் மகளிர் ஸ்டேஷனுக்கு வசந்தியை கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவரது உண்மை விவரங்களை வசந்தி ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி மதுரசேகரன் முன்னிலையில் ஆஜர் செய்தனர். போலி எஸ்.ஐ. வசந்தியை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
திடுக் புகார்:
இந்நிலையில் திருச்செங்கோடு சாலையைச் சேர்ந்த நாமக்கல் ரியல் எஸ்டேட் அதிபர் முருகானந்தன், வசந்தி மீது பண மோசடி புகார் அளித்துள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டில் வசந்தி தனது தம்பி திருமணத்துக்கு வாங்கிய ரூ.60 ஆயிரம் கடனுக்காக வழங்கிய செக் பணமில்லாமல் திரும்பியதாகவும், பலமுறை கேட்டபோதும் ஏமாற்றியதோடு பொய் வழக்கு போட்டு 'உள்ளே' தள்ளிவிடுவேன் என்று மிரட்டியதாகவும் அந்த புகாரில் முருகானந்தன் தெரிவித்துள்ளார்.
போலீசார் இதுபற்றியும் விசாரித்து வருகின்றனர்.