ரெளடி 'பாம்' பாலாஜி எண்கெளண்டரில் அவுட்!
திருச்சி-தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த ரெளடி பாலாஜி. நாட்டு வெடிகுண்டுகளையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசி எதிர் தரப்பினரை கொல்வதில் எக்ஸ்பர்ட் என்பதால் இவனுக்கு பாம்' என்ற அடைமொழி.
5 கொலைகள், ஆள் கடத்தல், பணம் பறிப்பு, கொள்ளை வழக்குகளி்ல் தொடர்புடையவன் இவன்.
கடந்த பிப்ரவரி மாதம் தஞ்சை பெரிய கோவில் வாசலில் வைத்து ரவிச்சந்திரன் என்பவர் பட்டப்பகலில் ஒருகும்பலால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையை செய்தது பாம்' பாலாஜி என்பு தெரியவந்தது. தனது கூட்டாளி ஜவகருடன் சேர்ந்து இந்தக் கொலையை செய்துவிட்டு தலைமறைவானான்.
இதையடுத்து இவனை பிடிக்க போலீசார் தீவிரமாயினர். ஆனால், திருச்செந்தூருக்கு தப்பிய பாலாஜி மொட்டை போட்டுக்கொண்டு மாறு வேடத்தில் சுற்றியபடி தனது குற்றச்செயல்களை தொடர்ந்து வந்தான்.
இந் நிலையில் திருச்சி அருகே திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீஸார் சர்க்கார்பாளையம் அருகே பனையபுரம் பகுதியில் நள்ளிரவு முதல் வாகன சோதனையி்ல் ஈடுபட்டிருந்தனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத ஒரு பைக் வந்தது. அதை ஓட்டியவரை போலீசார் நிறுத்தக் கூறியும் நிற்காமல் சென்றார்.
அவனை போலீசார் ஜீப்பில் விரட்டவே மோட்டார் சைக்கிளை ரோட்டில் போட்டு விட்டு சுடுகாட்டுக்குள் புகுந்து தப்பி ஓடினான். அவனை போலீசாரும் விரட்டி சென்றனர்.
சுடுகாட்டை சுற்று தடுப்பு வேலி இருந்ததால் அவனால் தப்ப முடியவில்லை. அவனை போலீசார் சுற்றி வளைத்து சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால், அவன் நான் தான் பாம் பாலாஜி. என்னை பிடிக்க முயன்றால் குண்டு வீசி கொல்வேன் என மிரட்டினான். ஆனால் போலீசார் அவனை நெருங்கவே பாலாஜி நாட்டு வெடிகுண்டை போலீசார் மீது வீசினான். ஆனால் அது வெடிக்கவில்லை.
இதையடுத்து தன்னிடம் இருந்த ரிவால்வர் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட ஆரம்பித்தான். இதில் ஒரு குண்டு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமாரின் இடது தோள் பட்டையை தாக்கியது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கபிலன் தனது துப்பாக்கியால் பாலாஜியை சுட்டார். இதில் அவன் அந்த இடத்திலேயே பலியானான்.
அவனது உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமாருக்கும் அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருச்சி கே.கே.நகரில் ஒருவரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டான். ஆனால், ஜாமீனில் வெளியில் வந்தவன் தலைமறைவாகி விட்டான்.
தலைமறைவாக இருந்தபடியே தான் தஞ்சை கோவில் அருகே ஒரு கொலையை செய்தான்.
பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் டி.ஐ.ஜி. அசோக்குமார் தாஸ், எஸ்பி கலிய மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
பின்னர் அசோக் குமார்தாஸ் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
பாலாஜி 5 கொலை வழக்குளில் சம்மந்தப்பட்டுள்ளான். 2003ல் தஞ்சையை சேர்ந்த சம்பா என்ற அன்பழகனை தீர்த்துக் கட்டியவன் தொடர்ந்து 2006ல் கரூர் பசுபதி பாளையத்தில் சிவா என்ற சிவக்குமாரையும் கொலை செய்தான்.
2008ல் 3 கொலைகளை செய்தான். திண்டுக்கல் ராஜா என்ற பெர்ணாண்டோ, தஞ்சையில் ரவிச்சந்திரன், வேலூர் சத்துவாச்சேரியில் சுரேஷ் ஆகியோர் பாலாஜியால் கொல்லப்பட்டனர் என்றார்.
பாம்' பாலாஜியின் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் திரண்டுள்ளதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.