ஒரு அடேங்கப்பா ஐ.ஏ.எஸ்!
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி, பொதுமக்களுக்கு அரசியல் 'சேவை' செய்ய தன்னைப் பதவியிலிருந்து விடுவிக்குமாறு கேட்டு மத்திய நிர்வாகத் தூறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதிலென்ன ஆச்சர்யம் என்கிறீர்களா?
இப்படி பணியிலிருந்து விடுவிக்க இவர் அபராதத் தொகையாக ரூ.20.60 லட்சத்தை அரசுக்குச் செலுத்தியிருக்கிறார், அதுவும் ஒரே செக்காக!!.
ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த அந்த அதிகாரியின் பெயர் தெபாப்ரதா காந்தா. 1987 பேட்சை சேர்ந்த அதிகாரியான இவர் ஆந்திர மாநில அரசில் தற்போது சிறுபான்மை நலத் துறை ஆணையராகப் பதவி வகிக்கிறார்.
கடந்த 21 ஆண்டுகளாகப் பணியிலிருந்து வரும் இவர் கரீம் நகர் மாவட்ட கலெக்டராகவும் இருந்துள்ளார். ஐதராபாத்தின் செல்வச் செழிப்பான பகுதியான பிரகாசம் நகர் ஏரியாவில் இவருக்கு அரண்மனை மாதிரி சொந்த பங்களாவே உள்ளது.
அது சரி... எதற்காக பதவி விலகுகிறார், ஏன் இவ்வளவு பணத்தைக் கட்டுகிறார்?
இவரது சொந்த மாநிலமான ஒரிஸ்ஸாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜாஜ்பூர் தொகுதியில் போட்டியிடப் போகிறாராம். இத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்குத் தொண்டாற்றவே இந்த விலகலாம்.
கடந்த 2006ம் ஆண்டு இவர் அமெரிக்காவுக்குப் போய் மேக்ஸ்வெல் நிர்வாகப் பள்ளியில் எம்.ஏ. பொது நிர்வாகவியல் படித்தார். மத்திய அரசு இதற்காக செலவிட்ட தொகை ரூ. 20.60 லட்சம்.
ஒப்பந்தப்படி, அரசு செலவில் வெளிநாட்டுக்குப் போய் மேற்படிப்பு படிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள், படிப்பு முடிந்த பிறகு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இடையில் விலகினால், அரசு செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும்.
இந்த விதிக்குக் கட்டுப்பட்டுத்தான் தெபாப்ரதா காந்தா அபராதம் கட்டுகிறார். இவரது ராஜினாமா கடிதம் மற்றும் செக்கைப் பெற்றுக் கொண்ட மத்திய அரசு விரைவில் பணியிலிருந்து காந்தாவை விடுவிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியால் ஒரே தவணையில் இவ்வளவு பெரிய தொகையை எப்படிப் புரட்ட முடியும்?.
எனக்கு இந்தப் பணம் ஒரு பெரிய விஷயமே இல்லை. எப்படியாவது அரசியலுக்குப் போக வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதற்கு அடுத்த ஆண்டுத் தேர்தலை விட்டால் மீண்டும் 2014 வரை காத்திருக்க முடியாது... மக்கள் சேவை செய்வதுதான் எனது ஒரே குறிக்கோள், என்கிறார் காந்தா.
இது எப்டி இருக்கு!












Click it and Unblock the Notifications