அத்வானியின் 'செலக்டிவ் மொராலிட்டி'-அமர்சிங்
டெல்லி: தன்னை புரோக்கர் என வர்ணித்த அத்வானியை கடுமையாக தாக்கியுள்ளார் அமர்சிங். அத்வானியை 'செலக்டிவ் மொராலிட்டி' தாக்கியுள்ளதாக கூறியுள்ளார் அமர்சிங்
'லால் சலாம்' (friendhsip with the Left) போட்டு வந்த காங்கிரஸ் இப்போது 'தலால் சலாம்' (friendhsip with brokers) போட்டு வருவதாக பாஜக தலைவர் அத்வானி கூறியிருந்தார். இதன்மூலம் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங்கை 'தலால்' (புரோக்கர்) என்று வர்ணித்திருந்தார்.
இதற்கு காட்டமாக பதில் தந்துள்ளார் அமர்சி்ங். அவர் கூறுகையில்,
என்னை 'புரோக்கர்' என்று கூறியிருக்கிறார் மரியாதைக்குரிய அத்வானி. ஆனால், என்னைப் போன்றவர்களுடன் 'அரசியல் பிஸினஸ்' நடத்திய கட்சி தான் பாஜக என்பதை அத்வானி மறக்கக் கூடாது.
அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமாவது தராதரம் இருக்க வேண்டும். வாஜ்பாயும் அத்வானியும் என்ன பேசினாலும் அதை மிக ஆர்வத்தோடு, மிக கவனமாக கேட்கும் பழக்கம் எனக்கு சிறு வயதிலிருந்தே உண்டு. அவர்கள் மீது அத்தனை மரியாதை உண்டு.
இதோ (அத்வானி எழுதிய மை கண்ட்ரி மை லைப் புத்தகத்தைக் காட்டி) இதை எனக்கு அனுப்பியது அத்வானி தான். எனக்காக தனிப்பட்ட முறையில் கையெழுத்துபோட்டு அவர் அனுப்பிய புத்தகம் இது. எப்போதெல்லாம் தங்களுக்கு அவசியமோ அப்போதெல்லாம் என்னைப் போன்ற 'புரோக்கர்களுடன்' பிஸினஸ் வைத்துக் கொள்ள பாஜக தலைவர்கள் யோசித்ததில்லை.
மேலும் இந்தப் புத்தகத்தில் அத்வானி என்ன எழுதியிருக்கிறார்.. ''நான் முலாயம் சிங் யாதவை ஜார்ஜ் பெர்னாண்டசின் இல்லத்தில் வைத்து சந்தித்தேன். சோனியாவை எதிர்க்க பாஜகவுடன் கூட்டணி சேருமாறு கோரினேன். ஆனால் முலாயம் ஏற்கவில்லை..'' என்று கூறியிருக்கிறார். அப்போது நாங்கள் அத்வானிக்கு புரோக்கர்களாகத் தெரியவில்லையா?.
மேலும் ஜனாதிபதி தேர்தலி்ன்போது பிரதீபாவை தோற்கடிக்க மூத்த பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங்கை முலாயமிடம் அனுப்பினார் அத்வானி. அதே போல அணு ஒப்பந்த விவகாரத்திலும் காங்கிரஸை எதிர்க்க தங்களுடன் கைகோர்க்குமாறு மீண்டும் ஜஸ்வந்த் சி்ங்கை அனுப்பினார் அத்வானி. அப்போது நாங்கள் புரோக்கர்கள் இல்லையா. காங்கிரஸை ஆதரித்தால் மட்டும் புரோக்கர்களா?.
பாஜகவுடன் கூட்டு சேரச் சொன்னவர், நாங்கள் காங்கிரசுடன் சேர்ந்தால் மட்டும் தார்மீக மரியாதையை (morality) இழந்துவிட்டதாக சொல்கிறார். இதற்குப் பெயர் தான் 'செலக்டிவ் மொராலிட்டி'. (அத்வானி குறித்து ஜெயலலிதா சொன்னா 'செலக்டிவ் அம்னீசியா' ஞாபகம் இருக்கா..)
ஜார்ஜ் புஷ்ஷைவிட மோசமானவர் அத்வானி என்று நான் முன்பு சொல்லியிருந்தேன். புஷ் ஆட்சியை விட்டு போகப் போகிறார். ஆனால், அத்வானி- மாயாவதி- நரேந்திர மோடி இணைந்து உருவாக்கியுள்ள முப்பெரும் கூட்டணி நாட்டில் மதவாதத்தை தீவிரமாக்கி வருகிறது என்றும் கூறினேன். இதனால் தான் என்னை தலால் என்று தாக்குகிறார் அத்வானி.
மூத்த அரசியல் தலைவரான அத்வானிக்கு அரசியல் எதிர்ப்புக்கும் தனிப்பட்ட எதிர்ப்புக்கும் உள்ள வித்தியாசம் தெரிய வேண்டும்.
அத்வானி எந்த சக்திகளுக்கு பிரதிநிதியாக உள்ளாரோ அந்த சக்திகளுடன் சமாஜ்வாடி கைகோர்க்காது. அதற்காக என்ன விலை கொடுக்கவும் நாங்கள் தயார்.
மத்திய அரசை கவிழ்ப்பதற்காக பாஜகவுடன் கூட்டணி சேரும் அளவுக்கு இடதுசாரிகள் போய்விட்டது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. ஆனால், இடதுசாரிகளுடன் எங்களுக்கு எப்போதுமே நல்லுறவு உண்டு. அவர்களை நிச்சயம் தாக்கிப் பேச மாட்டேன்.
இப்போது இடதுசாரிகளை ஆர்எஸ்எஸ் பாராட்டுகிறது. இவர்களே தான் முலாயம் சி்ங்கையும் ஒரு காலத்தில் பாராட்டியவர்கள். ஆனால், இவர்களது பாராட்டின் பின்னால் இருக்கும் ஆபத்தை உணர்ந்தவர்கள் நாங்கள் என்றார் அமர்சிங்.