சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களுக்கு வலைவீச்சு
சென்னை: முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதைத் தொடர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் யோகரத்தினம், ராஜரத்தினம் ஆகியோரைக் கைது செய்ய போலீஸார் களம் இறங்கியுள்ளனர்.
சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
இந்த தீவிபத்து காரணமாக பக்கத்தில் உள்ள லக்கி பிளாசா வணிக வளாகத்தையும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 2 ஊழியர்களைக் கைது செய்தனர். உரிமையாளர்களையும் கைது செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டது. இதையடுத்து யோகரத்தினமும், ராஜரத்தினமும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நேற்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து இரு உரிமையாளர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
இருவரும் தற்போது தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவர்களைத் தேடி போலீஸார் அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை.
போலீஸ் இணை ஆணையர் குணசீலன் நேரடி மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீஸார் இருவரையும் தொடர்ந்து தேடி வருகிறது.












Click it and Unblock the Notifications