லேமேன் பிரதர்ஸ் திவால்!-மெரில் லின்ஜ்சை வாங்கியது பேங்க் ஆப் அமெரிக்கா!!
{image-Lehman Brothers250_15092008.jpg tamil.oneindia.com}நியூயார்க்: உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான லேமேன் பிரதர்ஸ் (Lehman Brothers Holdings) திவால் ஆகிவிட்டதாக இன்று அறிவித்துவிட்டது.
திவால் ஆகிக் கொண்டிருக்கும் இன்னொரு மாபெரும் நிதி நிறுவனமான மெரில் லின்ஜ் (Merrill Lynch) நிறுவனத்தை பேங்க் ஆப் அமெரிக்கா 50 பில்லியன் டாலருக்கு வாங்க முன் வந்துள்ளது. இதையடுத்து இந்த நிறுவனம் மொத்தமாக மூடப்படுவதில் இருந்து தப்பியுள்ளது.
வங்கிகளுக்கே நிதி வழங்கும் தனியார் நிதி அமைப்புகள் தான் இந்த லேமேன் பிரதர்சும், மெரில் லின்ஜ் போன்றவையும்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த இரு நிதி அமைப்புகளும் பல்வேறு வங்கிகளுக்கு வீட்டுக் கடனுக்காக தந்த பணம் திரும்பி வரவில்லை.
கடனைத் திருப்பிக் கட்ட முடியாதவர்களுக்கு எல்லாம் அமெரிக்க வங்கிகள் கடன் தந்ததால் கடன்களிலேயே மூழ்கின அந்த வங்கிகள். இப்போது அந்த வங்கிகளுக்கு கடன் தந்த நிதி நிறுவனங்களும் மூழ்க ஆரம்பித்துள்ளன.
லேமேன் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு பல்வேறு வங்கிகளிடம் இருந்து வராமல் நின்று போயுள்ள கடன் 60 பில்லியன் டாலர்கள். நிறுவனத்தைக் காப்பாற்ற குறைந்தபட்சம் 60 பில்லியன் டாலர் தேவை என்ற நிலை. இதனால் தங்களை யாராவது வாங்க மாட்டார்களா என காத்துக் கிடந்தது லேமேன்.
ஆனால், இதை வாங்க யாரும் இல்லாததால் நிறுவனம் இன்று மஞ்சள் நோட்டீஸ் தந்துவிட்டது. இதில் முதலீடு செய்தவர்களின் பல பில்லியன் டாலர்கள் பணம் அம்பேல்.
மெரில் லின்ஜ்:
கிட்டத்தட்ட இதே நிலையில் தான் மெரில் லின்ஜ் நிதி நிறுவனமும் உள்ளது. இந்த நிறுவனமும் கொடுத்த கடனிலேயே மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆபத்பாந்தவனாய் வந்து காப்பாற்றியுள்ளது பேங்க் ஆப் அமெரிக்கா.
இந்த நிறுவனத்தை 50 பில்லியன் டாலருக்கு அந்த வங்கி வாங்குகிறது. இதனால் இந்த நிறுவனம் தப்பியுள்ளது.
அடுத்தது ஏஐஜி:
இந் நிலையில் இன்னொரு முன்னணி நிதி நிறுவனமான ஏஐஜி (AIG) திவால் நிலைக்குப் போய்க் கொண்டுள்ளது. அந்த நிறுவனம் தங்களுக்கு 40 பில்லியன் டாலர் கடன் தருமாறு அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு மனம் வைத்து ஏதாவது மத்திய வங்கியின் மூலம் இந்த நிறுவனத்துக்கு பண உதவி செய்தாலோ, பணம் முதலீடு செய்தாலோ ஏஐஜி தப்பலாம். இல்லாவிட்டால் மெரில் லின்ஜ் கதி தான் ஏற்படும் எனத் தெரிகிறது.
லேமேன் பிரதர்ஸ், மெரில் லின்ஜ், ஏஐஜி என அடுத்ததடுத்து அமெரிக்காவின் மாபெரும் நிதி நிறுவனங்கள் மூழ்கவே, இன்று உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.