பழைய வீட்டு கடன்களுக்கும் வட்டி குறைப்பு-சிதம்பரம்
சமீபத்தில் முதன் கடன்களுக்கான வட்டி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் சமீபத்தில்தான் 11 சதவிகிதத்திலிருந்து 9.25 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.
ஆனால் ஏற்கெனவே உள்ள வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. வங்கிகளும் மௌனம் காத்தன.
இந்த நிலையில் நிதித் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் பிரதமரின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதுகுறித்த கேள்விக்கு நேற்று மக்களவையில் பதிலளித்தார். அவர் கூறியதாவது:
மாறியுள்ள புதிய வட்டி விகிதங்களின்படி ஏற்கெனவே உள்ள கடன்களுக்கும் வட்டி குறைக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் வங்கிகள் தீவிரமாக இறங்கி, மாறும் வட்டி விகிதத்தை திருத்தி அமைக்க வேண்டும்.
இன்றைக்கு வீட்டு வசதித்துறை மிகவும் சிக்கலான கட்டத்தில் உள்ளது. இந்தத் துறையுடன் இரும்பு, சிமெண்ட், மின் சாதனங்கள், செங்கல், கோடிக்கணக்கான தொழிலாளர்கள்... என பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டுள்ளன. எனவே வீட்டு வசதித்துறையில் ஏற்படும் வீழ்ச்சி அனைவரையுமே பாதிக்கும்.
அதிலும் இன்றைக்கு இரும்பு எஃகு தேவை மிகவும் குறைந்துவிட்டது. ஏற்றுமதியே இல்லை என்ற நிலை. வீட்டு வசதித் துறையில் வீழ்ச்சி ஏற்பட்டால், அது இரும்புத் தொழிலை முழுமையாக பாதிக்கும். லட்சக்கணக்கான வேலை இழப்புகளுக்குக் காரணமாகிவிடும்.
உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக இந்தியாவில் கடும் நடவடிக்கைகள் விரைவில் அமலாகவுள்ளன. இதைத் தாங்கிக் கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.
இந்த ஆண்டு மிகக் கடுமையான ஆண்டாகவே இருந்தது. இருப்பினும் விவசாயம், தொழில்துறை, சேவைத் துறையில் எந்தவித தேக்கமும் இல்லாமல் வழக்கம் போல செயல்படும் வகையிலான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருப்பதை அரசு உறுதி செய்யும். இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டு நிச்சயம் இது அதிகரிக்கும்.
2007-08ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இறுந்தது. இந்த ஆண்டு ஏழரை முதல் 8 சதவீதமாக அது இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
பொருளாதாரத்தின் உற்பத்திப் பிரிவுகளுக்கு அதிக அளவில் கடன் வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வலியுறுத்தும்.
பிரதமரும், நானும் வங்கித் தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளோம். அதிக அளவில் கடன் வழங்குமாறு அப்போது கேட்டுக் கொண்டோம். நவம்பர் இறுதி முதலே கடன் கொடுப்பது அதிகரித்துள்து.
பிரதமர் தலைமையிலான உயர் மட்டக் குழு நிலைமையை கண்காணித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை அது எடுக்கும் என்றார் ப.சிதம்பரம்.