40 லோக் சபா தொகுதிகளிலும் வெற்றிக் கனி பறிப்போம்: ஜெ.
நாளை அதிமுக நிறுவனரான முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 92வது பிறந்த நாளாகும். இதையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
பேரறிஞர் அண்ணா தன் எழுத்தாலும் பேச்சாலும் தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்ப நிலையை மாற்றிக்காட்டியவர். அவருடைய தம்பியாக அரசியல் வானில் வளர்ந்து ஒளி வீசி மிக உயர்ந்த இடத்தை அடைந்தவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆருக்கு கிடைத்த வெற்றியானது இயற்கையானது, இமயம் போன்றது. அப்படிப்பட்ட வெற்றியை எட்டிப்பிடிக்க முயன்றவர்கள் சறுக்கி விழுந்து விட்டனர்.
எம்ஜிஆருக்கு பிறகு அவரது ஆட்சியை மீண்டும் அமைக்க நான் பட்ட துன்ப துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றைக்கு தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை சுட்டிக்காட்டி போராட்டங்களை நடத்தி வருவதுடன் மக்களுக்கு சேவை செய்வதிலும் முனைப்பு காட்டி வருகிறது.
வெற்றி காத்திருக்கிறது
ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணி என்பதே அதிமுகவின் குறிக்கோள். நாம் தொய்வின்றி மக்கள் பணியாற்றி துணிச்சலாக செயலாற்ற வேண்டும். அவ்வாறு துணிந்து செயல்படுபவர்களுக்குத்தான் வெற்றி கிட்டும். நாளைய வெற்றி நமக்காக காத்திருக்கிறது.
வானத்தையே வசப்படுத்தும் வலிமை மிக்க மக்கள் தலைவரான எம்ஜிஆரின் பிறந்த நாளில் பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற நெறிமுறைகளை பின்பற்றி விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும் கருணாநிதியின் அராஜகங்களை, வன்முறை வெறியாட்டங்களை, நிர்வாகத் திறமையின்மையை மக்கள் முன் எடுத்து வைத்து துணிச்சலுடன் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை பறிப்போம்.
சூளுரை ஏற்போம்
கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். அதிமுக ஆட்சியை விரைவில் மலரச் செய்வோம் என்று சூளுரை ஏற்போம்.
மறைந்தும் மறையாத மாமனிதரான தமிழக மக்கள் நினைவில் என்றென்றும் நிற்கும் எம்ஜிஆர் பிறந்த நாளில் மக்களுக்கு சேவை செய்வோம். நாளை நமதே; நாற்பதும் நமதே என்ற குறிக்கோளை அடைவோம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.