என் தொகுதியை அரசு புறக்கணிக்கிறதா?-விஜய்காந்தும்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
சென்னை: நான் எதிர்க்கட்சியை சேர்ந்தவனாக இருப்பதால் எனது விருத்தாசலம் தொகுதியை அரசு புறக்கணிக்கிறதா என்று அறிய விரும்புவதாக தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விருத்தாசலம் தொகுதி, கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவலூர் ஆதிதிராவிடர் காலனியில் மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தமுள்ள 30 வீடுகளில் 11 வீடுகள் தீக்கிரையாயின. நல்லவேளையாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. ஆனால் அந்த ஏழை, எளிய மக்களின் வீடுகளும், உடைமைகளும் அறவே பறிபோய்விட்டன. மொத்த இழப்பு ரூ. 7 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சட்டமன்றத்தில் நான் பேசுகையில், விருத்தாசலம் பகுதியிலுள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமை வாய்ந்தவை என்றும், அவை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றும் பேசினேன். அதன் பின்னர் இது குறித்து மின்துறை அமைச்சருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கடிதம் வாயிலாக தெரிவித்தேன்.

ஆனால் அது குறித்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் கலெக்டரை சந்தித்து, விருத்தாசலம் தொகுதி பிரச்சனைகளை சொல்லி, இந்த மின்துறை குறித்தும் புகார் செய்துள்ளேன். இந்தக் கடிதம் மாவட்ட கலெக்டர் மூலமாக அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டு பதில் கோரப்பட்டது.

அதற்கு விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் தனது கடிதத்தில் விருத்தாசலம் பகுதியில் மின்னூட்டம் செய்யப்படும் மின் பாதைகளிலுள்ள பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு மாற்றும் பணி படிப்படியாக செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பணி செய்யப்பட்டு புதிய மின்கம்பிகள் அமைத்து தற்போது சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலுள்ள பழைய மின் கம்பிகளும் மாற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் எனக்கு கிடைத்த தகவலின்படி இத்தகைய பணிகள் நடைபெறவில்லை என்பதுதான். எங்கெங்கு புகார்கள் வருகிறதோ அங்கு மட்டும் இந்த கம்பிகளை இணைக்கும் பணிதான் நடைபெற்று வருகிறது.

மக்களுக்கு கஷ்டங்கள் வருவதற்கு முன்பே அவற்றை உணர்ந்து தீர்ப்பது தான் நல்ல அரசுக்கு இலக்கணம். ஆனால் நான் பலமுறை எடுத்துக்கூறியும், மின்வாரியம் விருத்தாசலம் பகுதியிலுள்ள பழைய மின்கம்பிகளை இன்னும் மாற்றாமல் இருப்பதுதான் இத்தகைய விபத்துகளுக்குக் காரணமாதலால் அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஒரு வேளை எதிர்க்கட்சியை சேர்ந்தவனாக இருப்பதால் அரசு இவ்வாறு இந்த தொகுதியை புறக்கணிக்கிறதா என்று அறிய விரும்புகிறேன். எந்த கட்சி என்று பார்க்காமல் மக்கள் நலனையே மையமாகக் கொண்டு இனிமேலாவது பழைய மின்கம்பிகளை சரிபார்த்து மாற்றி அமைக்க கேட்டுக்கொள்கிறேன்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் குடும்பங்களுக்கு உடனடியாகச் சென்று தேவையான உதவிகளைச் செய்த எனது கட்சிக்காரர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்கள் இழந்த வீடுகளையும், உடமைகளையும் கணக்கிட்டு, அரசு அவர்களுக்கு உதவித் தொகை வழங்கி மீண்டும் அவர்கள் வாழ வழிவகை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் விஜய்காந்த் கூறியுள்ளார்.

விருத்தாசலம் தொகுதியி்ல் விஜய்காந்த் என்ன பணிகளைச் செய்துள்ளார் என்று சமீபத்தில் ஒரு முக்கிய வார இதழ் அத் தொகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரிடமும் கருத்து கேட்டது. அதில் விஜய்காந்துக்கு சாதகமாக பதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தத் தொகுதியில் நடக்கும் திட்டப் பணிகளின் காண்ட்ராக்டை தனது கட்சியினருக்கே கொடுத்துள்ள விஜய்காந்தால் எப்படி லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்றும் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக திமுக அரசை சாடி அறிக்கை விடும்போது மிகக் கடுமையான வார்த்தை பிரயோகம் செய்யும் விஜய்காந்த் இப்போது கொஞ்சம் தணிந்துவிட்டதும் குறிப்பிடத்தக்ககது. காங்கிரஸ் மூலமாக அவரை திமுக கூட்டணிக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடப்பது தெரியும்தானே...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+