சிதம்பரம் தீட்சிதர்கள் உண்ணாவிரதம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்தும் மற்றும் இந்து அறநிலையத் துறையினர் வரம்பு மீறி செயல்பட்டதாகக் கூறியும் தீட்சிதர்கள் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலை நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில் நடராஜர் கோயிலின் நிர்வாகப் பொறுப்புக்கு செயல் அலுவலரை அரசு நியமித்தது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதைதொடர்ந்து, இந்து அறநிலையத்துறையின் செயல் அதிகாரி அங்கு பொறுப்பேற்றுள்ளார்.
இந் நிலையில், நடராஜர் கோயிலை அரசு ஏற்றுக் கொண்டதைக் கண்டித்து சிதம்பரம் ஆலயப் பாதுகாப்புக் குழு மற்றும் தீட்சிதர்கள் சார்பில் சிதம்பரம் மேலவீதியில் உள்ள பெரியார் சிலை முன்பு நேற்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரதத்திற்கு வி.கே.காந்தி தலைமை தாங்கினார். கடலூர் பாஜக தலைவர் ஸ்ரீதரன், தொழிலதிபர் ராமநாத செட்டியார், போராட்டக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் சந்திரசேகரன், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் மற்றும் தீட்சிதர்கள், பொதுமக்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதம் இருந்தவர்களை அனைத்து கட்சி பிரமுகர்களும் மற்றும் வர்த்தகர்கள் வாழ்த்தி பேசினர்.