விஜயகாந்த் தலைமையில் 20ம் தேதி பேரணி: அமெரிக்க தூதரகத்தில் மனு
சென்னை: இலங்கைத் தமிழர் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் சென்னையில் 20ம் தேதி பிரமாண்டப் பேரணி நடத்துகின்றனர். பேரணியின் நிறைவாக அமெரிக்க தூதரக அதிகாரிகளைச் சந்தித்து விஜயகாந்த் கோரிக்கை மனுவினை அளிக்கிறார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதம், மொழி, இனம் ஆகிய வெறிகளோடு அமைந்த சிங்கள அரசு, இலங்கையில் மண்ணின் மைந்தர்களாகிய தமிழர்களை முப்படை கொண்டு தினந்தோறும் கொன்று குவித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் சாகின்றனர். ஆயிரக்கணக்கில் படுகாயம் அடைகின்றனர். இந்த இனப்படுகொலையை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள் உள்பட சகல தரப்பு மக்களும் கண்டன குரல் எழுப்பி கவலையை தெரிவித்துள்ளனர்.
உலகம் எங்கும் வாழ்கின்ற தமிழ் மக்களும் சிங்கள அரசைக் கண்டித்து, ஆங்காங்கே கண்டனப்பேரணி நடத்தி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களும், மலேசியாவிலும், ஜெனிவாவிலும் தமிழ் இளைஞர்கள் தங்கள் உடலை தீயிற்கு இரையாக்கியுள்ளனர்.
உலக அமைதியை காப்பதற்காக உருவாக்கப்பட்டது ஐ.நா மன்றம். உலக அமைதியை காப்பதில் அமெரிக்கா இன்று முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவின் இன்றைய அதிபராக உள்ள ஒபாமா ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக கருதப்படுகிறார்.
ஆகவே பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் சார்பாக, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கவனத்தையும், உலக அமைதியை உருவாக்க கடமைப்பட்டுள்ள ஐ.நா மன்றத்தின் பொதுசெயலாளர் பான்-கி-மூன் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தே.மு.தி.க. கண்டனப் பேரணி நடத்த முடிவு செய்துள்ளது.
வரும் 20-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் எனது தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் காந்தியடிகள் சிலை முன்பு கூடி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, அமெரிக்க தூதரகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் தமிழினத்தின் சார்பாக நமது முறையீட்டை தந்து அதை அதிபர் ஒபாமாவுக்கு அனுப்ப உள்ளோம்.
அதே போல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் இதே உணர்வுடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், ஐ.நா பொதுசெயலாளர் பான்-கி-மூனுக்கும் இலங்கைத் தமிழர் படுகொலையை தடுக்க ஈ-மெயில் மூலம் செய்தி அனுப்ப கேட்டுக் கொள்கிறேன்.
(அதிபர் ஒபாமாவின் இணையதள முகவரி: http://www.whitehouse.gov/contact, ஐ.நா பொதுசெயலாளர் பான்-கி-மூனின் ஈமெயில் முகவரி: [email protected])
இந்த பேரணியில் தே.மு.தி.க.வினர் மட்டுமல்லாது, தமிழ் உணர்வு கொண்ட மக்களும், மனிதாபிமானமுள்ள மற்றவர்களும், பெரியோர்களும், தாய்மார்களும், மாணவர்களும், இளைஞர்களும், வக்கீல்களும், தொழிலாளர்களும் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் தங்களது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.