இலங்கை வீரர்களை கடத்தும் முயற்சியை முறியடித்த டிரைவர்
லாகூரில் இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாளில் விளையாடுவதற்காக கிளம்பி கொண்டிருந்த இலங்கை வீரர்கள் இன்னும் சிறிது நேரத்தில் தங்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்பதை கொஞ்சமும் நினைத்து பார்த்திருக்கவில்லை.
பஸ்சில் வழக்கமான பாதையில் சென்று கொண்டிருந்த அவர்கள் மீது ஒரு வெள்ளை கார் மற்றும் 2 ஆட்டோக்களில் வந்த 12 தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்கியது கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் எளிதில் மறக்க முடியாததாக கோர சம்பவமாக பதிந்துவிட்டது.
இவர்களது பஸ் மீது 25 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தபோதும் காயங்களுடன் அவர்கள் உயிர்தப்பியது அதிர்ஷ்டவசமானது. விளையாட்டு உலகில் 1972ல் முனிச் ஒலிம்பிக்கில் 11 இஸ்ரேலிய வீரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின் கொடூரமான சம்பவம் தற்போது லாகூரில் தான் அரங்கேறியுள்ளது.
பணயக் கைதி...
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கைகளில் வாக்கி-டாக்கி, தண்ணீர் பாட்டில், பழங்கள், சாப்பாடு போன்றவற்றுடன் வந்துள்ளதை அடுத்து அவர்கள் இலங்கை வீரர்களை பணயக் கைதிகளாக பிடிக்க முயற்சித்திருப்பது தெரியவந்துள்ளது. இதை பாகிஸ்தான் உள்விவகார அமைச்சக தலைவர் ரஹ்மான் மாலிக்கும் உறுதிசெய்துள்ளார்.
தீவிரவாதிகள் துப்பாக்கியால் தாக்க துவங்கியதும் பஸ்சில் இருந்த இலங்கை வீரர்கள் வேகமாக செல்லுங்கள் என கூப்பாடு போட்டுள்ளனர். இதனால் துப்பாக்கி குண்டுகளுக்கு அஞ்சாமல் டிரைவர் வண்டியை எங்கும் நிறுத்தாமல் உடனடியாக மைதானத்துக்கு கொண்டு சென்றதன்மூலம் அனைத்து இலங்கை வீரர்களும் தற்போது உயிருடன் பத்திரமாக தாய்நாடு திரும்பியுள்ளனர். இதையடுத்து அனைவரும் டிரைவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் முக்கிய விளையாட்டான கிரிக்கெட்டை சீர்குலைத்துள்ள இந்த சம்பவத்தின் மூலம் உலகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் தீவிரவாதிகள் வெற்றி கண்டுள்ளார்கள். இதிலிருந்து பாகிஸ்தான் முழுவதும் அரசின் வசம் இல்லை என்பதும் அங்கு தாலிபான், அல் கொய்தா ஆதிக்கம் இருப்பதும் அப்பட்டமாக தெரியவந்துள்ளது.
தாக்குதலில் வீரர்கள் யாரும் பலியாகவில்லை. ஆனால் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள் நடக்க வேண்டும் என்ற அந்நாட்டு ரசிகர்களின் கனவுகள் பலி கொடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, இந்தியா தங்கள் தொடரை முன்னதாக ரத்து செய்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் வருவதாக இருந்த நியூசிலாந்தும் நேற்று இம்முடிவுக்கு வந்துள்ளது.
2011 உலக கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடத்துவது குறித்து ஆராயப்படும் என ஐசிசி அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மீது அடுத்த குண்டை தூக்கி போட்டுள்ளது.
இந்நிலையில் நாடு திரும்பிய இலங்கை கேப்டன் ஜெயவர்ததனே கூறுகையில், எனது குடும்பத்தினரை பார்த்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். முழுமையாக நாடு திரும்பியது நிம்மதி தருகிறது. இங்கு வந்த பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது என்றார்.
பஞ்சாப் மாநில கவர்னர் சல்மான் டசீர் கூறுகையில், தீவிரவாதிகள் துப்பாக்கி வைத்திருந்ததை பார்த்த போதிலே அவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மும்பை தாக்குதலில் பயன்படுத்திய அதை வழிகளை இங்கும் கையாண்டுள்ளனர் என்றார்.
இத்தாக்குதல் சம்பவத்துக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
லாகூர் தலைமை போலீஸ் அதிகாரி ரஹ்மான் கூறுகையில், தீவிரவாதிகள் பாஸ்துன் பழங்குடி மக்கள் போல் இருந்தனர். இவர்கள் அதிகமுள்ள வடமேற்கு எல்லை பகுதிகளில் தாலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகள் இருப்பதாக கருதப்படுகிறது. தீவிரவாதிகளை தீவிரமாக தேடி வருகிறோம் என்றார்.
முழுமையாக நாடு திரும்பியது நிம்மதி தருகிறது. இங்கு வந்த பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது என்றார்.