நாளை மீலாது நபி: கருணாநிதி, ஜெ. வாழ்த்து
சென்னை: மீலாது நபியையொட்டி முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் (மீலாது நபி) நாளை கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தாய் தந்தையரிடம் அன்பு செலுத்துங்கள், அவ்வாறே உறவினர்களிடமும், அண்டை வீடுகளிலுள்ள அந்நியரிடமும், ஆதரவற்றோரிடமும், ஏழைகளிடமும், எப்பொழுதும் உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களிடமும், பயணிகளிடமும், உங்கள் பணியாளரிடமும் அன்பு செலுத்துங்கள் என அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ வேண்டுமென மக்களுக்கு அறிவுரை வழங்கிய திருமகன் அண்ணல் முகம்மது நபிகள் பிறந்த பொன்னாள், மிலாது நபி நன்னாளாக நாளை உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களால் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
நபிகள் பெருமானைப் போற்றும் வகையில் மிலாது நபித் திருநாளுக்கு, அண்ணாவின் மறைவை அடுத்து நான் முதல்வராகப் பொறுப்பேற்ற 1969 ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறை வழங்கி ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்தியதையும், அந்த விடுமுறையை 2001ல் ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள் ரத்து செய்ததால் 2006ல் இந்த அரசு அமைந்த பின் மீண்டும் ஆணை பிறப்பித்து, நடைமுறைப்படுத்தி வருவதையும் சுட்டிக்காட்டி, அண்ணல் நபிகள் பெருமானின் அடியொற்றி வாழும் இஸ்லாம் சமுதாயம் தொடர்ந்து முன்னேறும் வகையில் பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் வழங்கி வரும் இந்த அரசின் சார்பில் இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த மிலாது நபித் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.
இன்பம் பொங்கட்டும்-ஜெ:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
இறைவனின் இறுதித் தூதராக வந்த அண்ணல் முகமது நபி அவர்கள் அவதரித்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமாக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த மீலாது நபி நல்வாழ்த்துகளை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அகில உலகத்தவர்க்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட பெருமகனார் முகமது நபி பிறந்த இந்த நன்னாளில் அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும்! இன்பம் பொங்கட்டும்!
இறைநபியின் போதனைகளான அமைதி, சகோதரத்துவம், சமாதானம் ஆகியவற்றை பின்பற்றி, வன்முறையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் இந்தியத் திருநாட்டில் நல்லாட்சி மலர நாம் அனைவரும் சபதம் ஏற்போம்!. இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த மீலாது நபி வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தங்கச்சாலையில் பேரணி- மாநாடு:
இதற்கிடையே, சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை சார்பில் மீலாது நபியை முன்னிட்டு பேரணி, மாநாடு நாளை மாலை தங்கசாலையில் நடைபெறுகிறது. பாபா ஜக்னூரி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக அமைச்சர் மைதீன்கான், பெரியகுளம் எம்.பி. ஆரூண், அப்துல் பாசித் எம்.எல்.ஏ. பொதுச் செயலாளர் மேலை நாசர், தலைவர் அப்துல்லா ஜமாலி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.