'என்னைய்யா பெரிய பேரம்...!'- விஜயகாந்த்
படு சுறுசுறுப்பாக முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் விஜயகாந்த், 22ம் தேதி முதல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி தொகுதிகளில் பிரசாரம் செய்த அவர் ராமநாதபுரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். ராமநாதபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிங்கை ஜின்னாவை ஆதரித்து முதலில் சாயல்குடியில் பிரசாரம் செய்தார்.
அவரது வேனுக்கு முன்பு முரசு ஒலித்தபடி ஒரு வேன் செல்ல பின்னால் வந்த வேனில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
வாலிநோக்கம், சிக்கல், ஏர்வாடி, கீழக்கரை, பெரியபட்டணம், ரெகுநாதபுரம், சித்தார்கோட்டை, பனைக்குளம், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, பரமக்குடி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின்போது விஜயகாந்த் பேசுகையில்,
தமிழ்நாட்டுக்கு தேர்தல் அல்ல. பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்கிறார்கள் தேசிய கட்சியினர். தமிழகத்தின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்றால் 40 தொகுதிகளிலும் தேமுதிகவை வெற்றிபெற செய்யுங்கள்.
ஒருவர் 5 முறையும், ஒருவர் 2 முறையும் முதல்வராக பதவி ஏற்றும் பலனில்லை. மீனவர்கள் தினந்தோறும் செத்து மடிகிறார்கள். இதற்கு கணக்கே இல்லை. இதற்கு யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
2 ஆட்சியும் சரியில்லை ...
லஞ்சத்தையும், வறுமையை ஒழிப்பதாக எந்த அரசியல் கட்சியும் கூறுவதில்லை. இதுவரை நடந்த 2 ஆட்சியும் சரியில்லை. புதிய ஆட்சி அமைக்க தேமுதிகவுக்கு ஆதரவு தாருங்கள். ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் சிங்கை ஜின்னாவை வெற்றிபெற செய்யுங்கள்.
தனித்திரு, பசித்திரு, விழித்திரு ..
முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடுகிறது. தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்று வள்ளலார் கூறினார். அதற்கு ஏற்ப நான் தனித்துதான் நிற்கிறேன். மக்களின் பசி எனக்கு தெரிந்திருப்பதால் பசித்திருக்கிறேன். உங்களது கனவு என்ன என்று தெரிந்திருப்பதால் விழித்திருக்கிறேன்.
இது தேமுதிகவின் கொள்கை. தமிழ்நாட்டுக்கு கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வரவேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. மீனவர் பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினை எதுவும் தீர்த்து வைக்கப்பட வில்லை.
குடுமியைப் பிடியுங்கள் ...
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. அவர்களுக்கு நீங்கள் ஓட்டுப்போட வேண்டுமா? அனைவரின் குடுமியை பிடிக்கும் சக்தி மக்களிடம் உள்ளது. அந்த சக்தியை நீங்கள் பயன்படுத்தவேண்டும். அந்த ஓட்டை ஒரு முறை மாற்றிப்போட்டு பாருங்கள். அவர்கள் பயப்படுவார்கள். நம்மிடம் ஓட்டுவாங்கிக்கொண்டு அவர்கள் சுகமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஒருமுறை எனக்கு வாய்ப்பு தாருங்கள். எல்லாவற்றையும் மாற்றி காட்டுகிறேன்.
அதிமுக, திமுகவினர் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி என்ன? அதை இதுவரை செய்து கொடுத்துள்ளனரா? என்பதை ஒருநிமிடம் யோசித்து பாருங்கள். விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. இறங்கியபாடில்லை.
வறுமையை ஒழிப்போம் என்று கூறுகின்றனர். ஆனால் இதுவரை ஒழிக்கவில்லை. ஒரு ரூபாய்க்கு அரிசி போடுகிறேன் என்று சொன்னால் வறுமை இருக்கிறது என்று தானே அர்த்தம்.
ஆட விடாமல், அசைய விடாமல் ...
நான் தைரியமாக வருகிறேன். கடைசிவரை மக்களுக்காக வாழ்ந்தான் என்பதற்காகத்தான் வருகிறேன். எனக்கு அடிக்கடி மிரட்டல் வருவதோடு, என்னை ஆடவிடாமல், அசைய விடாமல் ஆங்காங்கே வருமான வரித்துறை மூலம் ரெய்டு நடத்துகின்றனர்.
ஒரு தனி மனிதனிடம் எத்தனை முறைதான் ரெய்டு நடத்துவீர்கள். நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டேன் தாராளமாக நடத்துங்கள். எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு போங்கள். இருந்தால் தானே எடுத்துக்கொண்டு போவீர்கள்.
இவர்கள் சொல்கிறார்கள் சில நேரத்தில் எனக்கு பேரம் படியவில்லை என்று. என்னைய்யா பேரம்; எனக்கு பேரம் படிஞ்சிருந்தால் எனது திருமண மண்டபத்தை, தோட்டத்தை இடிக்க விட்டிருக்கமாட்டேன். அன்றைக்கே அந்த பேரத்தை கரெக்ட் பண்ணியிருப்பேன்.
இன்றைக்கு நான் பேக் வாங்கி தான் அரசியல் செய்ய வேண்டுமா? அதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டேன். எனவே மக்களே எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என்றார்.
ப.சிதம்பரத்துக்கு பயப்பட வேண்டாம்...
பின்னர் மானாமதுரையில் விஜயகாந்த் பேசுகையில்,
சிவகங்கை தொகுதி வேட்பாளரை இன்று மாலை அல்லது நாளை மறுதினம் அறிவித்து விடுவேன்.
இந்த தொகுதியின் மத்திய மந்திரிக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் ஓட்டு போட்டால்தான் அவர் மந்திரி. இல்லாவிட்டால் அவர் வெளியே போக வேண்டியதுதான். மத்திய- மாநில அரசுகளை விமர்சிக்க எனக்கு என்ன தகுதி உள்ளது என்று கலைஞர் பேசியிருக்கிறார். எனக்கு நிறைய தகுதி உள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாட்டால் தொழில்கள் முடங்கிபோய் உள்ளன. பல தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி கொள்ளையடித்து விட்டன. இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து கொள்ளையடித்து வருகின்றன.
நான் எப்போதும் உங்களுக்காகவே வாழ்வேன். எனக்கு உங்களுடன்தான் கூட்டணி. நான் உங்களை மட்டும்தான் நம்பியுள்ளேன். ஆனால் அவர்கள் உங்களை நம்பவில்லை. கூட்டணியை நம்புகின்றனர்.
எனவே திமுக-அதிமுக கூட்டணிக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்டுங்கள் என்றார்.