புதிய, புனித அரசியலைத் தருவதற்காக போராடுகிறது தேமுதிக - விஜயகாந்த்
சென்னை: பொதுமக்கள் ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழந்து வருகின்றனர். இத்தகைய சீர்கேட்டில் இருந்து தமிழ்நாடு விடுபட வேண்டும் என்று நாட்டில் உள்ள நல்லுள்ளம் கொண்டோர் எல்லோரும் ஏங்கி தவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில்தான் தே.மு.தி.க. ஒரு புதிய மற்றும் புனித அரசியலை தமிழ்நாட்டிற்கு தருவதில் ஓயாது போராடுகிறது என்று கூறியுள்ளார் அதன் தலைவர் விஜயகாந்த்.
தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜனநாயகத்தில் தேர்தல்கள் வெறுசடங்காகி வருகிறது. மேலும் தேர்தல்களே ஜனநாயகத்தை சீர்குலைத்திடவும் செய்கிறது. அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இந்த ஜனநாயக சீரழிவையே காட்டுகிறது.
இன்றைய தேர்தல்கள் நடக்கும் விதம் ஜனநாயகத்திற்கு பெரிய சவால் ஆகிவிட்டது மட்டுமல்ல, பொதுமக்கள் ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
இத்தகைய சீர்கேட்டில் இருந்து தமிழ்நாடு விடுபட வேண்டும் என்று நாட்டில் உள்ள நல்லுள்ளம் கொண்டோர் எல்லோரும் ஏங்கி தவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில்தான் தே.மு.தி.க. ஒரு புதிய மற்றும் புனித அரசியலை தமிழ்நாட்டிற்கு தருவதில் ஓயாது போராடுகிறது.
ஆகவே தனித்தன்மையை இழக்க கூடாது என்பதால் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. வெறும் சீட்டுக்களும், நோட்டுக்களும்தான் லட்சியம் என்றால் தே.மு.தி.க.வை கூட்டணிக்கு அழைத்த கட்சிகளோடு சேர்ந்து போட்டியிட்டு இருக்கும். அந்தவகையில் தே.மு.தி.க. தமிழ்நாட்டில் பத்தோடு பதினொன்றாவது கட்சியாக ஆகியிருக்கும்.
அதற்கு மாறாக தமிழ்நாட்டில் சாதி, மத பேதமற்ற ஊழலுக்கு இடமில்லாத ஒரு நல்ல அரசியலை தர வேண்டும் என்பதாலேயே, தெரிந்தே தான் இந்த பாராளுமன்ற தேர்தலில் தன்னை இந்த தியாக வேள்விக்கு உட்படுத்தியது.
கட்சியின் கட்டளையை ஏற்று பாராளுமன்ற தொகுதிகளில் கழக வேட்பாளர்கள் முழு மூச்சுடன் செயல்பட்டனர். கழக முன்னணியினரும், கழக தொண்டர்களும் இரவு பகல் பாராமல் கடந்த 2 மாத காலமாக கடுமையாக உழைத்தனர்.
தமிழ்நாட்டிற்கு எதிர்காலத்தில் ஒரு நல்ல அரசியல் தேவை என்று எண்ணிய பொதுமக்களும் நம்முடைய முயற்சிக்கு பண மழைக்கு இடையிலும் பெருவாரியான அளவிற்கு வேறு எதையும் எதிர்பார்க்காமல் வாக்களித்தனர்.
தேனீக்களை போல பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது பாராட்டுகள். அரசியலில் ஒரு நல்ல சக்தி உருவாக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்த பொதுமக்களுக்கும், தாய்மார்களுக்கும் என் இதயமார்ந்த நன்றி.
தமிழ்நாடு உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். தடைகள் பல வந்தாலும் அவற்றை தாங்கும் தடம் தோள்கள் நம்மிடம் உண்டு. பழி பாவங்களை செய்து பெற்ற வெற்றியை விட, பழிச் சொல்லுக்கு இடமில்லாமல் சான்றோர் பெற்ற இழப்பே சிறந்தது- என்ற வள்ளுவர் வாக்கு நினைவு கூறத்தக்கது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications