தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம்-தடுக்க சட்டம்
சென்னை: தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க ஓரரு நாட்களில் சட்டம் கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டசபையில் இன்று தனது துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசுகையில்,
முதல்வர் கருணாநிதி கல்வித் துறையில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
கல்விக் கட்டணத்தை சீரமைக்க வேண்டும் என்பது குறித்து இங்கே உறுப்பினர்கள் பேசினார்கள். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
அதற்காக ஒரு சட்டம் இந்த அவையில் ஓரிரு நாட்களில் நிறைவேற்றப்படும். இதற்கான பூர்வாங்க பணிகள் முடிந்து விட்டன. முதல்வரும் அனுமதி வழங்கி விட்டார் என்றார்.
இதையடுத்து தனது துறையின் கொள்கை விளக்கக் குறிப்புகளை அவர் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இதுவரை 42,924 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2009-10ம் ஆண்டில் தொடக்க கல்வித்துறைக்கு 5,773 இடைநிலை ஆசிரியர்களை வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,195 விரிவுரையாளர்களை தேர்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சட்டக் கல்லூரிகளில் 15 விரிவுரையாளர்கள் மற்றும் 7 விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
அனைவருக்கும் இடை நிலைக்கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ், 20 மாதிரி பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
புதிதாக பிரிக்கப்பட்ட பெரம்பலூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களை உருவாக்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
பொது நூலக தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும் இண்டர்நெட் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாத விவரம்:
ஜி.கே.மணி (பாமக): காமராஜர் பிறந்த நாளில் இன்று கல்வித் துறை மீது விவாதம் நடைபெறுவது பொருத்தமாக உள்ளது. பாமக, காங்கிரசை சாராத கட்சியாக இருந்தாலும் காமராஜரின் நூற்றாண்டு விழாவை டாக்டர் ராமதாஸ் மிகப்பெரிய விழாவாக கொண்டாடினார். காமராஜரோடு வாழ்ந்தவர்களை அழைத்து விழாவில் பேச வைத்து சிறப்பும் செய்தார்.
காமராஜர் வழங்கிய இலவச கல்வித் திட்டத்தில் படித்தவன் நான். கல்வியின் பெருமையை உயர்வாகக்கூறும் நிலையில் தமிழ்நாட்டில் இன்று கல்வி எந்த நிலையில் உள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
இன்று பலர் தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்க்க விருப்பப்படுகிறார்கள். காரணம் அரசுhd பள்ளிகளில் கல்வி தரம் குறைவாக இருப்பதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். கிராமங்களிலும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நடைமுறையை முழுமையாக அcல்படுத்த வேண்டும். டெல்லி போன்ற மற்ற மாநிலங்களில் மத்திய அரசு பாடத்திட்டம், மாநில அரசு பாடத்திட்டம் என்றுதான் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மெட்ரிக்குலேசன் உள்பட 5 வகை பாடத்திட்டம் இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும்.
சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதில் ஏன் இன்னும் தயக்கம் காட்டுகிறீர்கள். இது நடைமுறைக்கு வராது என்றும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே சமச்சீர் கல்வியை கொண்டு வருவீர்களா? எப்போது முதல் செயல்படுத்தப்படும் என்பதை அமைச்சர் அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்பட அனைத்து பள்ளியிலும் தமிழ் பாடம் கட்டாயம் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். நிறைய பள்ளிகளில் இது பின்பற்றபடுகிறதா என்று தெரியவில்லை.
அமைச்சர் தங்கம் தென்னரசு: எல்லா பள்ளிக்கூடங்களிலும் தமிழ் பாடம் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என சட்டமாக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு முதல் 1, 2, 3ம் வகுப்புகளில் படிப்படியாக தமிழ் கட்டாயப் பாடமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4ம் வகுப்பு வரை கட்டாய தமிழ்மொழி பாடம் கற்பிக்க அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு பள்ளியில் இது பின்பற்றப்படவில்லை என்றாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.