கோபாலபுரம் வீடு மருத்துவமனையாக மாறும் - கருணாநிதி
ஏழைக் குடும்பங்கள் பயன் பெறும் வகையில், தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
திட்ட தொடக்க விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் இன்று மாலை நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் முதல்வர் கருணாநிதி உருக்கமாக பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நான் வாழும் கோபாலபுரம் வீட்டை எனது காலத்திற்குப் பின்னர் தமிழக அரசிடமோ அல்லது திமுக அறக்கட்டளைக்கோ வழங்க விரும்புகிறேன்.
இந்த வீட்டில் இலவச மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். ஏழை, எளிய மக்களுக்கு இங்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றார்.
ஒரு கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவாக உள்ள ஒரு கோடி குடும்பத்தினர் இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள்.
இந்த திட்டத்தில் சேர்க்கப்படுபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடல்நலம் பாதிக்கப்பட்டால், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையிலும் இலவச சிகிச்சை பெறலாம்.
இத்திட்டத்துக்கான பிரீமியத் தொகையை அரசே கட்டி விடும்.
மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.