ஆக்கிரமிப்பு காஷ்மீரை 5வது மாநிலமாக அறிவித்தது பாகிஸ்தான்
இதுதொடர்பான முடிவுக்கு பிரதமர் கிலானி தலைமையில் நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி கில்ஜித் பல்திஸ்தான் என்று பெயரிடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியான உள்நாட்டு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படும்.
பாகிஸ்தான் அமைச்சரவையின் இந்த முடிவுக்கு பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி, இன்னொரு முஸ்லீம் லீக் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துளளன. மற்ற கட்சிகள் நிராகரித்துள்ளன.
மேலும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவரான அமானுல்லா கானும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காஷ்மீர்ப் பகுதிகள் சிறப்பு அந்தஸ்து தரப்பட வேண்டியவை ஆகும். ஆனால் தற்போது பாகிஸ்தானின் ஐந்தாவது மாநிலமாக அதை மாற்றி விட்டனர். இதன் மூலம் காஷ்மீரிகளுக்கு அரசு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது என்றார்.
புதிய மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கென தனி சட்டசபை உருவாக்கப்படவுள்ளது. இந்த சட்டசபைக்கு நவம்பர் மாத மத்தியில் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை அமலுக்கு வரும் வரை ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நிர்வாகத்தைக் கவனிக்க காஷ்மீர் விவகாரத்துறை அமைச்சர் குமார் ஸமன் கெய்ரா ஆளுநராக செயல்படுவார்.
புதிய சட்டசபையில், 24 நேரடி உறுப்பினர்களும், பெண்களுக்கு 6 சீட், தொழிலதிபர்களுக்கு 3 சீட் என இருப்பார்கள்.
ஒரு மாகாணத்துக்குரிய அனைத்து அரசுப் பதவிகளும் இங்கு உருவாக்கப்பட்டு, அனைத்து அதிகாரிகளும் நியமிக்கப்படுவர் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வட பகுதியைத்தான் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இதை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்கிறோம்.
ஒருங்கிணைந்த காஷ்மீரின் வட பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. அதை வட பகுதி மற்றும் ஆசாத் காஷ்மீர் என இரண்டாகப் பிரித்து வைத்துள்ளது.
வட பகுதியை ஒட்டியுள்ள சிறிய பகுதியை (காரகோரம் ஒப்பந்தத்தின் மூலம்) சீனாவுக்குத் தாரை வார்த்தது பாகிஸ்தான்.
அதேபோல, காஷ்மீரின் இன்னொரு பகுதியா சீனா ஆக்கிரமித்துள்ளது. அதற்கு அக்சய் சீன் என்று அது பெயரிட்டுள்ளது.
தற்போது வட பகுதி எனப்படும் பிரதேசத்தைத்தான் கில்ஜித் பல்திஸ்தான் என புதிய மாகாணமாக்கியுள்ளது பாகிஸ்தான் அரசு.
வட பகுதி காஷ்மீரில் உள்ள இரு முக்கியப் பிரதேசங்கள்தான் கில்ஜித் மறறும் பல்திஸ்தான். பல்திஸ்தானை 1948ம் ஆண்டு ஆக்கிரமித்தது பாகிஸ்தான்.
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் மேற்கில், பாகிஸ்தானின் பஞ்சாப், வடமேற்கு எல்லைப்புற மாகாணம், வட மேற்கில் வாகான், வடக்கில் சீனாவின் சுயாட்சிப் பகுதியான ஜின்ஜியாங் உய்கூர் சுயாட்சிப் பிரதேசம், கிழக்கில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இதரப் பகுதிகள் உள்ளன.