மேலும் 239 ஆம்புலன்ஸ்களுடன் விரிவாகும் '108 இலவச சேவை'
சென்னை: 206 ஆம்புலன்ஸ்களுடன் இயங்கி வரும் அவசரகால இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 8 மாவட்டகளுக்கு விரிவுபடுத்தவும், இத் திட்டத்திற்காக மேலும் 239 ஆம்புலன்ஸ்கள் வாங்கவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியன்று துவங்கப்பட்டது அவசரகால ஆம்புலன்ஸ் திட்டம். சாலை விபத்து, தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு அவசர கால தேவைக்கு 108 என்ற இந்த ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
22 ஆம்புலன்ஸ்களுடன் 24 மாவட்டங்களில் துவங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 20,000 நோயாளிகள் பயனடைந்துள்ளனர். இத் திட்டத்துக்காக அரசு மாதந்தோறும் ரூ.2 கோடி செலவிட்டு வருகிறது.
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனை வளாகத்தில் இந்த சேவைக்கான கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.
இந் நிலையில் இன்று கஸ்தூரிபாய் மருத்துவமனை வளாகத்துக்கு வந்த முதல்வர் இந்த ஆம்புலன்ஸ் சேவையின் கட்டுப்பாட்டு மைய செயல்பாட்டை நேரில் பார்வையிட்டார்.
இதையடுத்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்த மாத இறுதிக்குள் எஞ்சி உள்ள 8 மாவட்டங்களுக்கும் இந்த ஆம்புலன்ஸ் திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த ஆண்டின் இறுதிக்குள் இத் திட்டத்திற்கு மொத்தம் 445 ஆம்புலன்ஸ்கள் இருக்கும் வகையில் இத் திட்டம் விரிவாக்கப்படும்.
கடந்த ஓராண்டில் இந்த திட்டத்தின் வாயிலாக அவசர உதவிக்காக 2,02,629 அழைப்புகள் மத்திய கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டன. தகவல் அறிவதற்காக 28,72,468 அழைப்புகள் பெறப்பட்டன.
மொத்த அவசர உதவிக்கான அழைப்புகளுள் 1,43,785 அழைப்புகளுள் மருத்துவ அவசர தேவைகளுக்காகவும், 9,481 அழைப்புகள் காவல் துறை சம்பந்தமான அழைப்புகளாகவும், 211 அழைப்புகள் தீயணைப்புத் துறை சம்பந்தமான அழைப்புகளாகவும் இருந்தன.
ஒரு அவசர கால ஊர்தியினால் ஒரு நாளைக்கு தற்போது 3 நபர்கள் இலவசமாக பயனடைகின்றனர். ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் 618 நபர்கள் இந்த அரசின் இலவச சேவையை பயன்படுத்தி நலமடைகின்றனர். ஒரு மாதத்தில் சுமார் 20,000 பயனாளிகள் இந்த வசதியை பெறுகின்றனர்.
இந்த சேவையினால் மிக மிக ஆபத்தான நிலையில் இருந்த 7152 நோயாளிகள் சரியான நேரத்தில் சரியான மருத்துவமனையில் '108 எண் சேவை' வாயிலாக சேர்க்கப்பட்டு அவர்களின் விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டுள் ளன. மற்ற நோயாளிகள் சரியான மருத்துவ சேவையை பெற்றுள்ளனர்.
சிறப்பான இந்த திட்டத்தின் வாயிலாக மிகவும் அதிக அளவில் பயன்பெற்றவர் படுகாயம் அடைந்தவர்களும் கர்ப்பிணி தாய்மார்களும் ஆவார். ஓராண்டில் படுகாயமுற்ற 46,617 நபர்களும், 31,024 கர்ப்பிணி தாய்மார்களும் பயனடைந்துள்ளளனர் என்பது மிகவும் மகிழ்த்தக்கதும், பெருமைப்பட வேண்டியதுமாகும்.
கர்ப்பிணி தாய்மார்களின் நலனில் மிகுந்த கவனம் செலுத்த, அனைத்து கர்ப்பிணி தாய்மார்களின் பிரசவிக்கும் தேதியை முன் கூட்டியே பெற்று, அவர்களுக்கு 108-ன் சேவையின் செய்தியை தெரிவித்து, பிரசவ காலத்தில் உடனடியாக சேவையை வழங்குவதின் வாயிலாக தாய்சேய் இறப்பின் விகிதம் குறைய வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.
இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட நோயாளிகள் பெரும்பாலும் 76 சதவீதம் அரசு மருத்துவ சேவையை நாடியுள்ளனர் என்பதன் வாயிலாக அரசின் இலவச மருத்துவ வசதியை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிய வருகிறது. தனியார் மருத்துவமனையை விரும்புவோர் 14 சதவீதம் மட்டுமே.
இந்த திட்டத்திற்காக கடந்த நிதியாண்டில் ரூபாய்29.29 கோடி அரசால்ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்கு அரசு ரூபாய் 55.13 கோடி ஒதுக்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.