தாய்-மகன் கொலை: மேலும் 2 பேர் கைது
இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த 24ம் தேதி அசோக்நகரில் அனந்தலட்சுமியும் (39), அவரது மகன் சூரஜ்குமாரும் (13) கொலை செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம் மற்றும் லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்டது.
இதில் பல தகவல்கள் தெரியவந்துள்ளன. 4 வருடங்களுக்கு முன்பு மருந்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய போது அனந்தலட்சுமியின் கணவர் ராமசுப்பிரமணியனும், கிறிஸ்டோபர் என்பவரும் நண்பர்களாயினர்.
கிறிஸ்டோபருக்கு தூத்துக்குடியை சேர்ந்த வேல்முருகன் (சரணடைந்தவர்) நண்பராக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி ராமசுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர்.
இப்போது ராமசுப்பிரமணியன் பெங்களூரில் பணியாற்றி வருவதால் மாதம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தான் வீட்டுக்கு வந்து செல்வார்.
இந் நிலையில், கொலை நடந்ததை தொடர்ந்து அவரது வீட்டுக்கு வந்து சென்ற நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் வேல்முருகன் மட்டும் தலைமறைவாகி இப்போது நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
வேல்முருகனுக்கு அதிக பணத் தேவை இருந்துள்ளது. இவர் முன்பு புதுச்சேரியில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்தபோது தூத்துக்குடியை சேர்ந்த பாலா என்கிற பலுவன் (22) மற்றும் தேவக்கோட்டையை சேர்ந்த விஜயராஜ் (22) ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர்.
இவர்கள் இருவரையும் வேல்முருகன் சென்னைக்கு அழைத்துக் கொண்டு சம்பவத்தன்று அனந்தலட்சுமியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
அனந்தலட்சுமியின் மகன் கதவை திறந்ததும் மூவரும் வீட்டுக்குள் நுழைந்து அனந்தலட்சுமியை கீழே தள்ளி கழுத்தை நெறித்து சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து அவரை குத்தி கொலை செய்துள்ளனர்.
இதை அவரது மகன் பார்த்து விட்டு சத்தம் போட்டதால் அவனையும் வாயை பொத்தி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
அதன் பிறகு மூவரும் அனந்தலட்சுமி கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலி, கருகமணி மாலை, இரண்டு மோதிரங்கள், இரண்டு வளையல்கள் உள்ளிட்ட 15 பவுன் நகைகள், பீரோவில் இருந்த ரூ. 40,000 ரொக்கத்தையும், ஒரு லேப்டாப்பையும் கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, வேல்முருகனின் கூட்டாளிகள் பாலா, விஜயராஜ் ஆகிய இருவரையும் போலீசார் புதுச்சேரியில் வைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லேப்டாப், ரூ. 10,000, 5 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.
கொலையாளிகள் வாக்குமூலம்:
பாலா, விஜயராஜ் போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:
வேல்முருகன் எங்களுடன் ஒன்றாக ஹோட்டலில் வேலை பார்த்து வந்தான். அவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு உண்டு. மது, மாது பழக்கத்தால் அதிகமாக பணம் தேவைப்பட்டது. இதனால் அவனுக்கு ஏற்கனவே அறிமுகமான ராமசுப்பிரமணி வீட்டில் கொள்ளையடிக்கலாம் என்று கூறினான்.
அதன்படி கடந்த 24ம் தேதி புதுவையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தோம். ஏற்கனவே அறிமுகமான நபர் என்பதால் வேல்முருகன், ராமசுப்பிரமணியன் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான். அனந்தலட்சுமி கதவை திறந்து உள்ளே அழைத்தார். நாங்கள் 3 பேரும் உள்ளே சென்றோம். வேல்முருகன் அனந்தலட்சுமியிடம் பேசிக்கொண்டிருந்தான்.
அப்போது வேல்முருகன் திடீரென அங்கு கிடந்த துணியால் அனந்தலட்சுமியின் கழுத்தை இறுக்கி கீழே தள்ளினார். நாங்கள் உடனடியாக தலையணையால் முகத்தை அழுத்தினோம். தலைமுடியை பிடித்து தரையில் வேகமாக பலமுறை ஓங்கி அடித்தோம். அதோடு விடாமல் அவரை சமையல் அறைக்கு இழுத்து சென்றோம்.
அங்கிருந்த காய்கறி நறுக்கும் சிறிய கத்தியால் அவரது கழுத்தில் குத்தினோம். அப்போது பக்கத்து அறையில் இருந்த சிறுவன் சூரஜ்குமார் சமையல் அறைக்கு வந்துவிட்டான். அவன் எங்களை காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக அவனையும் கத்தியால் குத்தி கொலை செய்தோம்.
பின்னர் அனந்தலட்சுமி அணிந்திருந்த தாலி செயின், முருகுமணி மாலை, 2 மோதிரம், 2 வளையல், 1 ஜோடி கம்மல் ஆகியவற்றையும், பீரோவில் இருந்து ரூ. 40 ஆயிரம் பணத்தையும், லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றையும் கொள்ளையடித்து தப்பி வந்துவிட்டோம்.
மீண்டும் புதுவை சென்று கொள்ளையடித்த பொருட்களை பிரித்து எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளனர்.
சரணடைந்துள்ள வேல்முருகனையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமிஷ்னர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய உதவி கமிஷனர் பரந்தாமன் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் பரிசு வழங்கி பாராட்டினார்.