காபூல் குண்டுவெடிப்பு - பலி 17 ஆனது - தலிபான் பொறுப்பேற்பு
இன்று காலை காபூல் நகரில், ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக அலுவலகம், இந்தியத் தூதரகம், அமெரிக்கத் தூதரகம் உள்ளிட்டவை அமைந்துள்ள இடத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடைபெற்றது.
இந்தியத் தூதரகத்தின் சுவர் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய டிரக்கை தீவிரவாதிகள் மோதச் செய்தனர். இதில் அது வெடித்துச் சிதறியது. இந்த கோர சம்பவத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய தூதரகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோ- திபெத் பாதுகாப்புப் படையினர் 3 பேர் உள்பட 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அந்தப் பகுதியே புகை மண்டலமாக காணப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் ஏராளமான அலுவலகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், மார்க்கெட் உள்ளிட்டவை உள்ளன.
குண்டுவெடிப்பை நேட்டோ அமைப்பின் சர்வதேச பாதுகாப்பு உதவி படையின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
2வது முறை...
ஏற்கனவே காபூல் இந்தியத் தூதரகம் மீது ஒருமுறை தாக்குதல் நடத்தப்பட்டதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
ஆகஸ்ட் மாதம் முதல் காபூலில் நடைபெறும் நான்காவது குண்டுவெடிப்புச் சம்பவம் இது.
சமீபத்தில், காபூல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சாலையில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் ஆறு இத்தாலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
தலிபான்கள் பொறுப்பேற்பு...
இந்த நிலையில் இந்த கொலைவெறித் தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம் என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்களது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்தியத் தூதரகத்தை குறி வைத்துத்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் கூறுகையில், இந்தோ - திபெத் பாதுகாப்புப் படையினர் 3 பேர் இந்த சம்பவத்தில் லேசான காயமடைந்துள்ளனர். இருப்பினும் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றார்.
கடந்த ஆண்டு இந்தியத் தூதரகம் மீது நடந்த தாக்குதலைப் போலவே இன்றைய சம்பவமும் இருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.