கமல் தலைமையில் எப்ஐசிசிஐ கருத்தரங்கு!
சென்னை: இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (Federation of Indian chamber of Commerce and Industry - FICCI) சென்னையில் நடத்தும் 'ஊடகம்-கேளிக்கை தொழில் வர்த்தக கருத்தரங்கில் (Media and Entertainment Conclave) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த 500 பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
இத்தகவலை இக் கருத்தரங்கின் தலைமைப் பொறுப்பில் உள்ள நடிகர் கமல்ஹாஸன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற கமல்ஹாசன் இதுகுறித்து கூறியதாவது:
இது ரொம்பப் பெருமையான, பெரிய விஷயம். இந்த FICCI டெல்லியிலும், மும்பையிலும்தான் இதுவரை கருத்தரங்குகள் நடத்தி வந்தது. இப்படியொரு கருத்தரங்கு தென்னிந்தியாவில், அதுவும் சென்னையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காக நானும் நண்பர் ரஜினியும் சில வாரங்களுக்கு முன் நடந்த இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று வற்புறுத்தினோம்.
உலக அளவில் அதிக படங்களை தயாரிக்கும் நாடு இந்தியா. அதில், அதிக படங்களை தயாரிப்பது தென்னிந்தியாதான். அதன் பலம் தெரியவேண்டும் என்பதற்காக, ஊடகம் மற்றும் கேளிக்கை தொழில் வர்த்தக கருத்தரங்கை சென்னையில் நடத்த வேண்டும் என்று வாதாடி பெற்றோம்.
இந்த கருத்தரங்கின் தலைவராக என்னை தேர்வு செய்து இருக்கிறார்கள்.
அனைத்திந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு என்பது பன்மொழி பேசும் இந்திய அமைப்பு. இது ஒரு கம்பெனி அல்ல. சினிமா சார்ந்த சேவைக்கான மையம். இதைத் தொடங்கி வைத்தவர் சாதாரண ஆளல்ல... மகாத்மா காந்தி. சினிமாவை ஒரு தொழிலாக பாவித்து, சினிமாவுக்கும் தொழில்துறையில் ஒரு அந்தஸ்தைப் பெற்றுக்கொடுத்த அமைப்பு இது.
இந்த கருத்தரங்கு, சென்னை கிண்டியில் உள்ள லே ராயல் மெரிடியன் ஓட்டலில் வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
கருத்தரங்கை, தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கிறார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி அம்பிகா சோனி கலந்துகொண்டு பேசுகிறார்.
இங்கிலாந்து, பிரான்சு உள்பட உலகம் முழுவதிலும் இருந்து திரையுலக பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். உலக தமிழ் மாநாடு போல், இது உலக சினிமா மாநாடாக இருக்கும். உலகம் முழுவதும் உள்ள கலைஞர்கள் இதில் கலந்துகொண்டு தங்கள் ஆய்வுகளை எடுத்து சொல்ல இருக்கிறார்கள்.
ரூ.50 லட்சம் உதவி
இந்த மாநாட்டை பற்றி புரிந்துகொண்டு முதல்-அமைச்சர் கருணாநிதி ரூ.50 லட்சம் நிதி உதவி செய்ததுடன், சில யோசனைகளையும் சொல்லியிருக்கிறார்.
ரஜினிகாந்த் இந்த மாநாட்டின் கமிட்டியில் இடம்பெற சம்மதித்துள்ளார். அவருடன் மம்முட்டி, மோகன்லால், ஏவி.எம்.சரவணன், கே.பாலசந்தர் உள்ளிட்ட திரையுலகினர், மீடியா ஜாம்பவான்கள் பலரும் மாநாட்டில் கலந்துகொள்ள சம்மதித்துள்ளனர்..." என்றார் கமல்.