இன்னும் 48 மணி நேரத்தில் எனது முடிவை அறிவிப்பேன் - பொன்சேகா
கொச்சி: அடுத்த 48 மணி நேரம் எனது வாழ்க்கையின் மிக நெருக்கடியான கட்டமாக இருக்கும். எனது முடிவை இன்னும் 48 மணி நேரத்தில் சொல்கிறேன் என்று கூறியுள்ளார் சரத் பொன்சேகா.
எக்ஸ்பிரஸ் இதழுக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், அடுத்த 48 மணி நேரம் எனது வாழ்க்கையின் மிக மிக நெருக்கடியான கட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்துக்குள் நான் முடிவெடுக்கவுள்ளேன்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதா, பாதுகாப்புத்துறை அமைச்சகம் உள்ளிட்டவற்றின் மீது வழக்குப் போடுவதா என்பது குறித்து தீர்மானித்து அறிவிப்பேன்.
நவம்பர் 22ம் தேதி என்னை திடீரென அதிகாரப்பூர்வ வீட்டைக் காலி செய்யுமாறு உத்தரவிட்டனர். 6 நாட்களுக்குள் வீட்டை மாற்ற வேண்டும். எப்படி முடியும். எனவேதான் தொடர்ந்து இதே வீட்டில் தங்கியிருக்கிறேன்.
ஆனால் இந்த வீட்டில் தங்கியிருக்கு எனக்குப் பிடிக்கவே இல்லை. ஏதோ வெளியாள் போல என்னை நடத்துகிறார்கள்.
அவர்கள் (ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே) எனக்கு எதிராக அரசியல் ரீதியாக மட்டும் செயல்படவில்லை. மீடியாக்களைக் கூட நான் தொடர்பு கொள்ளக் கூடாது என்று நடத்தி வருகின்றனர். மேலும், எனக்கு எதிராக மக்களைத் திருப்பும் முயற்சியிலும் கூட அவர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள்.
இந்திய ராணுவம், பொற்கோவிலில் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், அதற்குக் காரணமானவர் (ராணுவத் தளபதி) என்ன கதியைச் சந்தித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே விடுதலைப் புலிகளின் வீச்சிக்குப் பின்னர் என்னைக் கொல்லத்தான் சதி நடந்தது. இன்னும் மிரட்டல் உள்ளது. எனக்கான பாதுகாப்பை அரசு குறைத்த பின்னர் இந்த மிரட்டல் மேலும் பலமடைந்துள்ளது.
நான் இந்தியாவுக்கு எதிரானவன் என்பதெல்லாம் வதந்திகளே. ஒரு ராணுவத் தளபதியாக நான் இருந்தபோது, அந்த அந்தஸ்தில் பலமுறை இந்தியாவுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்.
நான் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து விட்டால், இந்த நாட்டை ஊழலற்ற நாடாக மாற்றுவேன். ஜனநாயகம் தழைத்தோங்க பாடுபடுவேன் என்றார் பொன்சேகா.
ஜே.வி.பி. ஆதரவு...
இதற்கிடையே, ஜனதா விமுக்தி பெரமுனா, தங்களது கட்சி பொன்சேகாவை அதிபர் தேர்தலில் ஆதரிக்கும் என அறிவித்துள்ளது.