தினசரி 2 மணி நேர மின் தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர இதர ஊர்களில் தினசரி இரண்டு மணி நேரம் மின் தடை அமல்படுத்தப்படுகிறது. இதனால் தொழில் துறையினர் முதல் மாணவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
சென்னைக்கும் மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்குவதும், மற்ற ஊர்களை இருளில் ஆழ்த்துவதும் பாரபட்சமான செயல் என கண்டனக் குரல் பரவலாக எழுந்துள்ளது.
இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக மின்வாரியத்தின் இந்த அணுகுமுறை, மக்களை ஜெனரேட்டர், யுபிஎஸ் போன்ற சாதனங்களை வாங்க தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ளது என தனது மனுவில் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'சென்னையை தவிர மற்ற இடங்களில் மின்தடையை ஏற்படுத்துவது மற்ற பகுதிகளில் வசிப்பவர்களை இரண்டாம் தர குடிமக்களை போன்று நடத்தும் செயலாகும். அரசியல் அமைப்பு சட்டப்படி அனைவருக்கும் சம உரிமை அளிக்க வேண்டும்.
இதுபற்றி தமிழக மின்வாரிய தலைவர், செயலாளர் ஆகியோருக்கு மனு கொடுத்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சென்னையை போன்று மற்ற பகுதிகளிலும் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிட வேண்டும்' என மீனாட்சி சுந்தரம் நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்த மனு வருகிற 5ம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.