கருணாநிதி பாராட்டு விழா-அரசு ஊழியர்க்கு 2 நாள் 'லீவு'!
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில், முதல்வர் கருணாநிதிக்கு சென்னையில் நாளை பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந் நிலையில் இதில் பங்கேற்பதற்காக சென்னை வர வசதியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர வகைப் பணியாளர்களுக்கு 2 நாள் தற்செயல் விடுப்பு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள உத்தரவில்,
மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து மாவட்ட மற்றும் அனைத்து துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர வகைப் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு தற்செயல் விடுப்பும், சனிக்கிழமை அனுமதியும் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், சனிக்கிழமை வேலை நாளாக உள்ள பணியாளர்களுக்கு இரண்டு நாள்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க அனுமதி வழங்கப்படுகிறது.
சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்கும் அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் தங்களது விடுப்பு விண்ணப்பத்துடன் மாநாட்டில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை உரிய சங்கங்களிடம் இருந்து பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் மாநாட்டில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் மாநாட்டு அரங்கத்திலேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சூரியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் கலந்து கொள்ள தடை கோரிய மனு தள்ளுபடி:
இந் நிலையில் இந்த மாநாட்டில் அதிகாரிகள் கலந்து கொள்வதற்கு தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த கங்கைமுத்து என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசுப் பணியில் இருந்து 1998ம் ஆண்டு நான் ஓய்வு பெற்றேன். தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் தலைவராக இருந்துள்ளேன். எனது பணி ஓய்வுக்குப் பிறகு இந்த ஒன்றியத்தின் தலைவராக சூர்யமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.
அரசுப் பணியில் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
மேலும் சூர்யமூர்த்தி மீது துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன. அவர் 30.6.10 அன்று ஓய்வு பெற இருக்கிறார். இந்த வழக்கு விவகாரங்களில் இருந்து தப்பிப்பதற்காக சுயலாப நோக்கத்தில் 22.5.10 அன்று மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார்.
இந்த மாநாடு நடத்தப்படுவது பற்றியெல்லாம் ஒன்றியத்தின் பொதுக் குழுவில் விவாதிக்கப்படவில்லை. பல வழக்குகளில் சிக்கி இருக்கும் அரசு ஊழியர் ஒருவர் நடத்தும் மாநாட்டில் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது.
சூர்யமூர்த்தி மீதான துறை ரீதியான நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதற்கு தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் சூர்யமூர்த்தி நடத்தும் மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபாலன், இந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியிடம் மனுதாரர் விண்ணப்ப மனு கொடுக்கலாம். அந்த மனுவை அதிகாரி பரிசீலிக்க வேண்டும். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.