சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயார்: ஸ்டாலின்
சென்னை: சட்டமன்றத் தேர்தல் சந்திக்க திமுக தயாராக இருப்பதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.இன்று முதல் 7ம் தேதி வரை தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்யும் ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.
தூத்துக்குடியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து நடத்தும் 1,000 மெகாவாட் மின் நிலையப் பணிகளை ஸ்டாலின் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரவிருக்கும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இருக்கிறது. தேர்தலில் நிச்சயம் திமுக கூட்டணியே பெரும் வெற்றி பெறும்.
ஜெயலலிதாவின் முகமூடியை கிழிக்கவே தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சொத்து குவிப்பு வழக்கில் தொடர்ந்து இதே 'வாய்தா போக்கை' ஜெயலலிதா கடைபிடித்தால், திமுக ஆர்ப்பாட்டமும் தொடரும்.
தமிழகத்தில் ரூ. 32,500 கோடி செலவில் 10 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் 2012ம் ஆண்டில் தமிழகத்தில் மின் பற்றாக்குறை முழுமையாகத் தீரும் என்றார்.
இதைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் ஒன்றியம் தருவைகுளம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கும் ஸ்டாலின், பின்னர் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 941 சுனாமி குடியிருப்புகள் வீடுகளையும், தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, 1250 மகளிர் சுய உவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இரவு 7 மணிக்கு தூத்துக்குடி முத்துநகரில் ரூ. 550 கோடி உணவுப் பதப்படுத்தும் சிறப்பு பொருளாதா மண்டலத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
நாளை திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். வீரவநல்லூரில் தசைச் சிதைவு மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மைய துவக்க விழாவிலும் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
பின்னர் கல்லிடைக்குறிச்சியில் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார். இதையடுத்து அம்பாசமுத்திரத்தில் வட்டாட்சியர் கட்டிடம், மேம்பாலத்துக்கு அடிக்கல், மணிமுத்தாறு குடிநீர் திட்டம், 1500 சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளிலும், வாஞ்சிநாதன் மணி மண்படத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார்.
அரசு மருத்துவமனைகளை திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அவர் 7ம் தேதி சங்கரன்கோயில் களப்பாகுளம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து வட்டாட்சியர் அலுவலகம், புதிய கட்டிடங்கள் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
மணிக்கு திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
ஜெ.வுக்கு எதிராக எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டம்-ஸ்டாலின்:
முன்னதாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சாக்குபோக்கு சொல்லியே வாய்தா மேல் வாய்தா வாங்கி 13 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் ஜெயலலிதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை ஒரு உத்தமி போல காட்டிக்கொள்ள, தமிழக மக்களை அவமதிக்கும் விதமாக அறிக்கை மேல் அறிக்கை விடுக்கும் ஆணவப் போக்கினை கண்டித்தும், நேற்று திமுக இளைஞர் அணியின் சார்பில், ஆகஸ்ட் 4ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்றுள்ள மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியோடு அமைந்தது என்று கூறியுள்ளார்.