தமிழ் வழக்கு மொழி: டெல்லியில் வழக்கறிஞர்களுடன் திருமாவளவன் போராட்டம்
சென்னை: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாகக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்கு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
சென்னை, மதுரை, உயர்நீதிமன்றக் கிளைகளில் செயலாற்றி வரும் வழக்கறிஞர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி சில ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 9-6-2010 முதல் 24-6-2010 வரை சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டம் நடத்தப்பட்டது.
வழக்கறிஞர்கள் பகத்சிங், ராஜேந்திரன், பாரதி, நடராஜன், எழிலரசு, ராஜா ஆகியோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடினர். எனினும் அக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனைக்குறியதாகும்.
ஆகவே மீண்டும் இக் கோரிக்கையை உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு வருகிற 25ம் தேதி டெல்லியில், மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.
இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை எனக்கு வழங்கி இருக்கும் நிலையில் தமிழ் தேசிய வழக்கறிஞர்கள், விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.