மதுரையில் ஜெ. கூறப்போகும் புகார்களை சந்திக்க தயார்-அழகிரி

மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து மூன்று இடங்களில் இலவச திருமணம் மண்டபம் கட்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உத்தரவிட்டிருந்தார். அந்த திருமண மண்டபங்கள் மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதி அமைந்துள்ன.
திருமண மண்டபம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில்,
என்னுடைய தொகுதி நிதி மட்டுமல்லாமல், எனது பிறந்த நாள், முதல்வர் மற்றும் பெரியாரின் பிறந்த நாளின் போது நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறேன்.
ஆண்டிப்பட்டியில் நடந்த மருத்துவ முகாமில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். மேலும் பயனாளிகளுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வழங்கப்பட்டன. ஆனால் நான் ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடி மக்களுக்கு வழங்கி வருவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டி வருகிறார்.
ஜெயலலிதா தொகுதி பக்கமும் வருவதில்லை. சட்டசபைக்கு வந்து பேசுவதுமில்லை. ஆனால் நான் நலத்திட்ட உதவிகளை வழங்கினால் மட்டும் குறை கூறுகிறார்.
மதுரையில் இம்மாதம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறிய ஜெயலலிதா பின்னர் தனக்கு மிரட்டல் வருவதாக அவரே கூறிக் கொள்கிறார். இந்நிலையில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
முதல்வர் நாள் ஒன்றிற்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். ஆனால் ஜெயலலிதாவோ ஓய்வுக்காக அடிக்கடி கொடநாடு சென்று விடுகிறார். அவர் தலைமை நிலையத்திற்கு செல்வதையே விழாவாக கொண்டாடும் அதிமுகவினர் பராசக்தியே, தர்மதாயே என்று பேனர் வைக்கின்றனர். ஜெயலலிதாவின் குற்றச்சட்டுகளுக்கு பதில் அளிக்கத் நான் தயாராக இருக்கிறேன்.
அவர் தாராளமாக ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுப் போகட்டும். நான் தற்போது வளர்ச்சித் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.
திமுக அரசு கடந்த ஆட்சியின்போது பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியது. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறுத்தியவர் ஜெயலலிதா.
முட்டுக்கட்டை போடும் ஜெ.:
கடந்த ஆட்சியைவிட தற்போது மக்கள் நலத் திட்டங்களை இருமடங்காக்கி திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றுக்கெல்லாம் முட்டுக்கட்டை போடும்வகையில் அதிமுகவினரைத் தூண்டி போராட்டங்களை நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
மதுரை மக்களவைத் தொகுதியில் நான் போட்டியிட்டபோது எனக்கு அதிகமான வாக்குகளை அளித்து மக்கள் வெற்றிபெறச் செய்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது நான் வெற்றி பெற்றால் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஒரு திருமண மண்டபம் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன்.
அதன்படி மதுரை மக்களவைத் தொகுதியில் உள்ள மதுரை கிழக்கு, மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் திருமண மண்டபங்கள் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 25 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்படுள்ளன.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் 75 சதம் பணிகள் முடிவடைந்துள்ளன. அடுத்த மாதம் திருமண மண்டபம் திறந்து வைக்கப்படும். மதுரையில் 15 வட்டங்களில் உப்புநீரை குடிநீராக்கி மக்களுக்கு வழங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டப் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் மாட்டுத்தாவணி காய்கறி மொத்த வணிக வளாகம் அமைக்க ரூ. 2 கோடியும், 27 பகுதிகளில் தார்ச்சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 50 லட்சமும், டி.வி.எஸ். நகரில் பூங்கா அமைக்க ரூ. 40 லட்சமும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே எனது மக்களவைத் தொகுதியில் எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி முழுமையாகவும், விரைவாகவும் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறி எனக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அதில் எனக்குத் திருப்தி இல்லை.
மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியை இன்னும் உயர்த்த வேண்டும். எனது தொகுதியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தற்போது எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு ரூ. 1.5 கோடி வழங்கப்படுகிறது.
எம்.பி. தொகுதி நிதியை அதிகரிக்க வேண்டும்:
இந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய எம்.பி. தொகுதிக்கு மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ. 2 கோடி மட்டும் வழங்கப்படுகிறது. தொகுதி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இந்த நிதி போதுமானது அல்ல.
எனவே, மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு ரூ. 9 கோடியாக உயர்த்த வேண்டும். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளேன். இதை காங்கிரஸ் தலைவர்களும் வலியுறுத்தி ஆதரிக்க வேண்டும் என்றார் என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications