பணம் பறிப்பதற்காக கடத்தப்பட்ட அக்காள்-தம்பி கொடூரக் கொலை-சிறுவன் உடலும் கிடைத்தது

கோவை ரங்கே கவுடர் வீதி, காத்தான் செட்டி சந்து பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார் ஜெயின். இவர் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி சங்கீதா. இந்தத் தம்பதிக்கு முஸ்கின் ஜெயின் என்ற11 வயது மகளும், ரித்திக் ஜெயின் என்ற 8 வயது மகனும் உள்ளனர். இருவரும் காந்திபுரத்தில் உள்ள பள்ளியில் முறையே 5 மற்றும் 3ம் வகுப்பு படித்து வந்தனர்.
இருவரும் தினசரி பள்ளிக்கு கால்டாக்சியில் செல்வார்கள். நேற்று முன்தினமும் கால் டாக்சிக்காக வந்து காத்திருந்தனர்.ஆனால் வழக்கமாக வரும் கால் டாக்சி வரவில்லை. ஆனால் வேறு ஒருகால் டாக்சி வந்து அவர்களை அழைத்துச் சென்றுள்ளது. பின்னர் வழக்கமாக வரும் கால் டாக்சி டிரைவர் வந்தபோதுதான் குழந்தைகள் வேறு காரில் போனது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் குழந்தைகளின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் பதறியடித்து ஓடி வந்தனர். குழந்தைகள் இருவரும் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸ் ஆணையர் சைலேந்திரபாபுவிடம் புகார் கொடுக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய சைலேந்திரபாபு 8 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டைக்கு உத்தரவிட்டார்.
போலீஸார் விசாரணையில் இறங்கியிருந்த நிலையில் உடுமலையை அடுத்துள்ள தளி சர்க்கார்புதூர் அருகே பிஏபி கால்வாயில் சிறுவனின் புத்தகப் பை கிடைத்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் நாலாபுறமும் போலீஸார் தீவிர வேட்டை நடத்தியபோது ஒரு நபர் சிக்கினார். அந்த நபரிடம் விசாரித்தபோது அவர்தான் இரு குழந்தைகளையும் தண்ணீரில் தள்ளி விட்டுக் கொடூரமாகக் கொன்றது தெரிய வந்தது.
இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பிஏபி கால்வாய் முழுவதும் உடல்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. நள்ளிரவு வரை தேடியும் குழந்தைகள் கிடைக்கவில்லை. மேலும் மழை வேறு பெய்ததால் வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருந்தது. மேலும் திருமூர்த்தி அணையிலிருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் தேடுதல் பணியில் பெரும் தேக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கருப்பராயன் கோவில் என்ற இடத்தில் சிறுமியின் பை கிடைத்தது.
இதையடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து தண்ணீரின் வேகம் குறைந்தது.
இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் கள்ளிப்பாளையம் கிளைக்கால்வாயில் சிறுமி முஸ்கினின் உடல் மிதந்து செல்வதைப் போலீஸார் கண்டு அதிர்ந்தனர். உடனடியாக கயிறு கட்டி உடலை மீட்டனர்.
சிறுவனின் உடல் இன்று மீட்பு
மீட்கப்பட்ட சிறுமியின் உடலில் காயம் ஏதும் இல்லை. பள்ளிக்கூட சீருடையில் சிறுமியின் உடல் காணப்பட்டது. கிட்டத்தட்ட 77 கிலோமீட்டர் தூரத்திற்கு முஸ்கினின் உடல் மிதந்து வந்துள்ளது.
ஆனால் சிறுவன் ரித்திக்கின் உடல் கிடைக்கவில்லை. அவனது உடல் மேலும் நகர்ந்து போயிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளத்தில் வைத்து சிறுவனின் உடல் கிடைத்தது.
முஸ்கினின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுமியின் வீட்டுக்குச் சென்று உதவி ஆணையர் குமாரசாமி நடந்ததைக் கூறினார். இதைக் கேட்டதும் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். உதவி ஆணையரை சூழ்நது கொண்டு அவர்கள் கதறி அழுததைப் பார்த்து உதவி ஆணையரும் அழுதார்.
சிறுமியையும், சிறுவனையும் இரக்கமே இல்லாமல் கொன்ற டிரைவர் மோகனை போலீஸார் கைது செய்துள்ளனர். அவனிடம் நடத்திய விசாரணையில், பணம் பறிப்பதற்காக இருவரையும் அவன் கடத்தியுள்ளான். காரில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளேன். இருவரும் எங்கே போகிறீர்கள் என்று கேட்டதற்கு பள்ளிக்கூடம் லீவு. அதனால் சுற்றுலா அழைத்துச் செல்கிறேன் என்று கூறியுள்ளான். ஆனால் நேரம் ஆக ஆக குழந்தைகளுக்குச் சந்தேகம் வந்து வீட்டுக்குக் கூட்டிச் செல்லுமாறு கூற ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், தன்னைப் போலீஸார் நிச்சயமாக தீவிரமாக தேடுவார்கள் என்று பயந்து போயுள்ளான் மோகன். அப்போது, ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது சிறுமி முஸ்கின், கொலைகாரன் மோகனுக்கு சாப்பிட சப்பாத்தி கொடுத்துள்ளாள். அதையும் வாங்கிச் சாப்பிட்ட மோகன், பின்னர் குழந்தைகளை வாய்க்காலில் பிடித்துத் தள்ளி விட்டான். பிஏபி கால்வாயில் வெள்ளப் பெருக்கு போல தண்ணீர் அதி வேகமாக ஓடியதால் இரு குழந்தைகளும் பரிதாபமாக இறந்து போயுள்ளனர்.
கடத்தப்பட்ட அக்காள், தம்பி கொடூரமாக இவ்வாறு கொலை செய்யப்பட்டிருப்பது கோவையில் பெரும் பதட்டத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications