சர்ச்சைக்குரிய ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பின் சில தளங்களை இடிக்க வேண்டும்-ஜெயராம் ரமேஷ்
மகாராஷ்டிர அரசு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் தளங்களை இடிக்கும் பணியை தொடங்குவோம் என்று கூறியுள்ளார் ரமேஷ்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆதர்ஷ் சொசைட்டியின் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டபோது விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது குறித்து சந்தேகமே தேவையில்லை. அப்பட்டமான விதி மீறல் நடந்துள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில் அது தெளிவாகத் தெரிகிறது. இறுதி அறிக்கை வந்தவுடன் விதி மீறி கட்டப்பட்ட சில தளங்கள் இடித்துத் தள்ளப்படும்.
கடந்த காலங்களிலும் கூட இதுபோல நடந்துள்ளது. எனவே ஆதர்ஷ் சொசைட்டிக்கும் அது பொருந்தும் என்றார் ரமேஷ்.
மும்பையின் கொலாபா பகுதியில் 31 மாடிகளைக் கொண்டதாக இந்த 100 மீட்டர் உயரமுடைய அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ள இந்தக் குடியிருப்பில் கார்கில் போர் வீரர்களுக்கு வீடுகள் ஒதுக்குவதற்குப் பதில், அரசியல் வாதிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், அவர்கள் பரிந்துரைத்த நபர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இவர்களில் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானின் மாமியாரும் ஒருவர்.
விதிமுறைப்படி 30 மீட்டர் உயரத்திற்குத்தான் இந்த கட்டடம் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விதிகளை மீறி 100 மீட்டர் உயரத்திற்கு கட்டி வைத்துள்ளனர்.
ஜெயராம் ரமேஷ் தொடர்ந்து பேசுகையில், டெல்லியில் பகவான் தாஸ் சாலையில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட ஒயிட் ஹவுஸ் கட்டடத்தின் 4 மாடிகள் இடிக்கப்பட்டன. எனவே ஆதர்ஷ் கட்டடத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளக்க முடியாது என்றார் ரமேஷ்.
தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு, கடலோர ஒழுங்குமுறை மண்டலப் பகுதிக்குள் வருகிறது. இதனால் கடற்படையும், ராணுவமும் கூட இந்தக் கட்டடத்திற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.