குமரியில் நடவு இயந்திரம் அறிமுகம்: ஒரு மணி நேரத்தில் 1 ஏக்கர் பயிர் நடலாம்
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு மணி நேரத்தில் நடவை முடித்து விடலாம். நடவு செய்ய ரூ.3,500 செலவாகும்.
வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து நெல் நாற்று நடும் இயந்திரம் குறித்த செயல்விளக்கத்தை திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தியது.
ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட யான்மார் என்ற 8 வரிசை நெல் நாற்று நடும் இயந்திரத்தின் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
குமரி மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு கலந்து கொண்டு நாற்று நடவு இயந்திரம் குறித்த செயல்விளக்கத்தை காண்பித்தார். நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் கணேசன், குமரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கியாம் கரம்தாஸ், வேளாண்மை பொறியியல் துறை செயல் பொறியாளர் சாம் செல்வராஜ், திருப்பதிசாரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் கிருபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.