எனது கடிதத்தை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பக் கோரியிருந்தேன்-நீதிபதி ரகுபதி
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜா நான் விசாரித்து வந்த வழக்கில் தலையிடுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அப்போது இருந்த எச்.எல்.கோகலேவுக்குத்தான் நான் கடிதம் எழுதியிருந்தேன். இருப்பினும் பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அக்கடிதத்தை அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்குமாறும் கோரியிருந்தேன். இருப்பினும் அது அனுப்பி வைக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி.
அமைச்சராக இருந்த ராஜா, பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன் மூலம் நீதிபதி ரகுபதியின் விசாரணையில் தலையிட முயன்றதாக வெடித்துள்ள சர்ச்சையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு தான் கடிதம் அனுப்பியதாக ரகுபதி கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தனக்கு அப்படி ஒரு கடிதம் வரவே இல்லை என்று கே.ஜி.பாலகிருஷ்ணன் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தக் குழப்பம் குறித்து ஒரு நாளிதழுக்கு விளக்கியுள்ள நீதிபதி ரகுபதி, நான் 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலேவுக்கு கடிதம் எழுதினேன். அதில் நடந்த விவரங்களை விளக்கியிருந்தேன். இந்தக் கடிதத்தை நானே நேரில் சென்று தலைமை நீதிபதியிடம் அளித்தேன்.
பிரச்சினையின் தீவிரம் கருதி இந்தக் கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பார்வர்ட் செய்யுமாறும் கடிதத்தின் இறுதியில் கோரியிருந்தேன். கடிதம் கொடுத்ததோடு சரி, அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
நானே சந்திரமோகன் மீது கோர்ட் அவதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்திருந்தால் அது பாரபட்சமான நடவடிக்கையாக பார்க்கப்பட்டிருக்கும். அதனால்தான் நான் அதைச் செய்யவில்லை.
நான் எழுதிய கடிதம் தனக்கு வரவில்லை என்று முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியிருப்பது குறித்து நான் கருத்துக் கூற முடியாது. அவரிடம் இதுகுறித்து கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் ரகுபதி.