இலங்கை ராணுவத்தின் போர் குற்றம்: புதிய விடியோ ஆதாரங்கள் வெளியாகின!
கொழும்பு: நாளுக்கு நாள் இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்கள் புதுப்புது ஆதாரங்களுடன் அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
தமிழர்கள் கண்கள் கட்டப்பட்டு கொல்லப்பட்டது, தமிழ்ப் பெண்கள் சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டது ஆகியவற்றின் வீடியோக்களை வெளிட்ட சேனல் 4 தொலைக்காட்சி, இப்போது மேலும் சில புதிய வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
இதில் ஆடைகள் ஏதும் இன்றி கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் ஏராளமான தமிழர்கள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு கிடக்கும் கொடூரமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் இலங்கை மீது ஐ.நா. போர் குற்றம் தொடர்பான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில், சரணடைந்த விடுதலைப் புலிகள், தமிழர்கள் பலரை மிகக் கொடூரமாகக் கொன்றுள்ளது ராணுவம். இது தொடர்பான விடியோ ஆதாரங்கள் சிலவும் வெளியிடப்பட்டன.
அதில், விடுதலைப் புலிகளின் செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய இசைப்பிரியா என்ற இளம்பெண் கொடூரமாக மானபங்கப்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்படும் காட்சியும் வெளியானது.
இப்போது கிடைத்துள்ள விடியோவில் ஏராளமான தமிழர்கள் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் உடலில் ஆடைகள் ஏதும் இல்லை. அவர்கள் அனைவரும் மிக அருகில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதும் தெரிகிறது.
இது குறித்து நியூயார்க்கில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவத்தின் 53-வது படைப்பிரிவு இத்தகையை கொடூரங்களை அரங்கேற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இலங்கை அரசு மறுத்துள்ளது. இவை அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்ட விடியோக்கள் என்று தொடர்ந்து கூறி வருகிறது. அதே நேரம், இந்த வீடியோக்கள் அனைத்தும் உண்மை என சர்வதேச அமைப்புகளும் சேனல் 4-ம் நிரூபித்துள்ளன.
இன்னொரு பெண் புலியும் அடையாளம் காணப்பட்டார்
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த இசைப் பிரியாவுடன் சேர்த்து கொடூரமாகக் கொல்லப்பட்டஇன்னொரு பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளரும் இசை, நடன கலைஞருமான இசைப்பிரியாவை இலங்கை ராணுவத்தினர் படுகொலை செய்த வீடியோ ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன் சேனல் 4 வெளியிட்டிருந்தது. இசைப்பிரியாவை இலங்கை ராணுவத்தினர் படுகொலை செய்த புதிய தகவல்களை உள்ளடக்கிய வீடியோ ஒன்றை மீண்டும் சேனல் 4 வெளியிட்டிருந்தது.
அதில் இசைப்பிரியாவின் புகைப்படங்கள் பல்வேறு கோணங்களில் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்டது அந்த வீடியோவில் உள்ளது என்றும், இசைப்பிரியாவை ராணுவத்தினர் மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளதாகவும் சேனல் 4 செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இசைப்பிரியாவுடன் கொல்லப்பட்ட மற்றொரு பெண் விடுதலைப்புலியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் விடுதலைப்புலிகளின் ஊடகப் பிரிவில் பணியாற்றியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
அவரது சொந்த பெயர் குணலிங்கம் உசாலினி. மல்லாவில் 1990ஆம் ஆண்டு பிறந்த அவரை, அவரது பெற்றோர் கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்த்துள்ளனர்.
அகல்விழி என்ற பெயரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரால் அழைக்கப்பட்ட அந்தப் பெண், ஆரம்ப காலங்களில் கிளிநொச்சி புலனாய்வுத்துறையில் பணியாற்றியவர். அவர் கடைசிக்கட்ட போரின் போது இசைப்பிரியாவுடன் இணைந்து ஊடகத்துறையில் பணியாற்றியுள்ளார்.
இறுதிக்கட்ட போரின் போது ராணுவத்திடம் சரணடைந்த நிலையில் 2009ம் ஆண்டின் மே மாதம் 18ம் தேதி இசைப்பிரியாவுடன் சேர்த்து அவரும் கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.