ராடியா டேப்: டாடா கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு!
நீரா ராடியா டெலிபோன் டேப் விவகாரம் வெளியானதை எதிர்த்து, தொழில் அதிபர் ரத்தன் டாடா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த டெலிபோன் உரையாடல்கள், பத்திரிகை மற்றும் டி.வி. ஊடகங்களில் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே அதை வெளியிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளித்து, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் 8 பக்க பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் "டேப் விவகாரத்தை வெளியிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது" என்று பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு, வருமான வரித்துறை மற்றும் நிதி அமைச்சகம் ஆகிய மூன்றும் உச்சநீதிமன்றத்தக்கு பதில் அனுப்பியுள்ளன. அதில், ஏற்கெனவே பொது மீடியாவில் புழக்கத்தில் உள்ள நீரா ராடியா, ரத்தன் டாடா பேச்சுக்களை தங்களால் தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளன.