முஸ்கின், ரித்திக் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்: 400 பக்கங்கள், 126 சாட்சிகள்
கோவை ரங்கே கவுடர் வீதி, காத்தான் செட்டி சந்து பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார் ஜெயின். இவர் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி சங்கீதா. இந்தத் தம்பதிக்கு முஸ்கின் ஜெயின் என்ற 11 வயது மகளும், ரித்திக் ஜெயின் என்ற 8 வயது மகனும் இருந்தனர். இருவரும் காந்திபுரத்தில் உள்ள பள்ளியில் முறையே 5 மற்றும் 3ம் வகுப்பு படித்து வந்தனர்.
அவர்களை தினமும் பள்ளிக்கு கால்டாக்சியில் செல்வது வழக்கம். கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி அவர்கள் கடத்தி கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ் மற்றும் அவனது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் டிரைவர் மோகன்ராஜ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். மனோகரன் கோவையில் சிறையில் உள்ளான்.
இந்த வழக்கு குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணை அதிகாரியான ஏ.சி.குமாரசாமி மற்றும் இன்ஸ்பெக்டர் கணகசபாபதி இன்று கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிக்கை 400 பக்கங்கள் கொண்டது. அதில் 126 சாட்சிகளும், 85 கோப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.