விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு அபகரித்ததாக ராஜா மீது விவசாயிகள் புகார்
சென்னை: விவசாய நிலங்களை, தனது மனைவியும், குடும்பத்தினரும் உறுப்பினர்களாக இருந்த கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், மிகவும் அடிமாட்டுவிலைக்கு வாங்க உதவியதாக முன்னாள் அமைச்சர் ஏ.ராஜா மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள ராஜாவுக்கு இப்போது சொந்த ஊரான பெரம்பலூரில் விவசாயிகள் மத்தியில் புதிய பிரச்சினை எழுந்துள்ளது.
ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா. இவர்தான் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் முன்பு ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இயக்குநராக இருந்தார். பின்னர் விலகி விட்டார். ராஜாவின் அண்ணன் தற்போது இந்த நிறுவனத்தில் ஒருவராக உள்ளார்.
தற்போது இந்த நிறுவனத்தின் மீதும், ராஜா மீதும் கிட்டத்தட்ட 250 விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதாவது, கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் எங்களிடமிருந்த விவசாய நிலங்களை விலைக்கு வாங்கியது. ஆனால் மார்க்கெட் விலையை விட 3 முதல் 16 சதவீதம் குறைத்தே விலை கொடுத்தனர். இதற்கு ராஜாதான் காரணம். அவரது நிர்ப்பந்தத்தால்தான் அடி மாட்டு விலைக்கு எங்களது நிலத்தை விற்க நேரிட்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செல்லத்துரை கூறுகையில், மாவட்ட நிர்வாகத்தைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு நெருக்குதல் கொடுத்தார் ராஜா. செந்தில் என்ற விவசாயி 3.5 ஏக்கர் நிலம் வைத்திருந்தார். அவரது நிலத்தைப் பறிக்க முடிவு செய்த ஆளுங்கட்சியினர், அவர் மீது பொய்யான வழக்கைப் போட்டுக் கைது செய்து ரிமாண்ட் செய்தனர். பின்னர் வழக்கைக் கைவிட வேண்டும் என்றால் நிலத்தை விற்குமாறு மிரட்டினர். இதனால் வேறு வழியின்றி செந்தில் நிலத்தை விற்றார் என்றார்.
கடந்த 2007மாவது ஆண்டு பெரம்பலூரிலிருந்து 280 கிலோமீட்டர் தொலைவில் எம்.ஆர்.எப் ஆலைக்காக தமிழக அரசு 26 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. பின்னர் எம்ஆர்எப் நிறுவனம் அக்கம் பக்கத்தில் உள்ள 439 ஏக்கர் விவசாய நிலங்களை புரோக்கர்கள் மூலம் வாங்கிக் குவித்தது.
இந்த நிலையில், எம்ஆர்எப் நிறுவனத்திற்காக 430 ஏக்கர் நிலங்களைப் பெற்றுத் தருவதாக கூறி அந்த நிறுவனத்துடன் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ஆனால் ஏக்கருக்கு ரூ. 50,000 முதல் ரூ. 3 லட்சம் வரை விலை கொடுத்து 200 ஏக்கர் நிலங்களை தானே வாங்கி தானே வைத்துக் கொண்டது. அப்போது ஒரு ஏக்கரின் உண்மையான மதிப்பு ரூ. 18 லட்சம் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.
எம்ஆர்எப் நிறுவனத்திற்காகத்தான் தங்களது நிலங்களை விற்கிறோம், நிலத்தைக் கொடுத்தால் வீட்டுக்கு வேலை ஒன்று கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் சொன்னதை நம்பி, குறைந்த விலையாகஇருந்தாலும் பொருட்படுத்தாமல் விற்றோம். ஆனால் கிரீன்ஹவுஸ் நிறுவனம் எங்களை ஏமாற்றி விட்டது என்கிறார்கள் விவசாயிகள்.
இந்த சர்ச்சை குறித்து மாவடச்ட கலெக்டர் விஜயக்குமார் கூறுகையில், இரு தனியார் நிறுவனங்களுக்கிடையிலான விவகாரங்களில் அரசு தலையிட முடியாது. இருந்தாலும், மோசடி நடந்திருப்பதாக விவசாயிகள் உணர்ந்தால், உடனடியாக கிரிமினல் புகார் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.