2010ல் ஆப்கனில் தாலிபான்களுக்கு எதிரான போரில் 700 சர்வதேச படையினர் பலி
காபூல்: தாலிபான்களுக்கு எதிரான போரில் இந்த ஆண்டு மட்டும் சர்வதேச ராணுவத்தினர் 700 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐகேஸுவாலிட்டீஸ் என்ற இணையதளம் (iCasualties.org) தெரிவித்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் சண்டையில், இந்த ஆண்டுதான் அதிக அளவிலான உயிர்ப்பலியை அமெரிக்கா தலைமையிலான படையினர் சந்தித்துள்ளனர். இந்த ஆண்டு அதிகபட்சமாக 701 பேர் உயிர் இழந்துள்ளனர். இதில் பேரிழப்பு அமெரிக்காவுக்கே. இறந்தவர்களில் 493 பேர் அமெரிக்கப் படையினர், 101 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்று அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் போர்தந்திரத்தை மறுபரிசீலிப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதற்கு மறுநாள் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கப் படையில் ஒரு சிறு பகுதியை திரும்பப் பெறப்போவதாக ஒபாமா அறிவித்திருந்தார்.
ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் தாலிபான் அட்டூழியங்களைக் கட்டுப்படுத்த சர்வதேச படைகள் அங்கு முகாமிட்டு போரில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போதைய நிலையில் ஈராக்குக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து பெரும் இழப்புகளை அமெரிக்கா சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.